காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் எங்கள் பகுதியையே அதிகாரிகள் மறந்து விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, காலிகுடங்களுடன் ராயமுண்டான்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு: விரக்தியடைந்த மக்கள்
பூதலூர் அருகேயுள்ள ராயமுண்டான்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் பெண்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
குடிநீரைப் பெறுவதற்காக சிலர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பெண்கள்
தொடர்ந்து நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிராம மக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் காரணமாக அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
குவிந்த அதிகாரிகள்... மக்களுடன் பேச்சுவார்த்தை
போராட்டம் குறித்து தகவலறிந்த வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக குடிநீர் விநியோகத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், கூடுதலாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும் என்றும், ஒரு வார காலத்திற்குள் நிரந்தர தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்
அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சாலை மறியலை வாபஸ் பெற்றனர். இதையடுத்து போக்குவரத்து மீண்டும் சீரானது.
இந்தப் போராட்டத்தில் ராஜாங்கம், திருமேனி, ராஜேந்திரன், அறிவழகன், பெரியசாமி, தண்டாயுதபாணி, ரமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை கிராம மக்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் எங்கள் பகுதியையே அதிகாரிகள் மறந்து விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இதனால்தான் சாலைமறியலில் ஈடுபட்டோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால்தான் தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை இல்லை என்றால் மேலும் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்தனர்.
Before You Go
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்ஷனில் இறங்கிய POLICE
ட்ரெண்டிங் செய்திகள்





















