பயணிகளே ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... 3 ரயில்களின் சேவையில் மாற்றமாம்
நடுத்தர மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

தஞ்சாவூர்: ரெயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் திருச்சி வழியாக செல்லும் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் – வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஒட்டி பாலக்காடு – திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) நேற்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வரும் 10, 13-ஆம் தேதிகளில் கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், பணிகள் முடிந்த பிறகு அந்த ரெயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும்.
மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16811) வரும் 10, 13-ஆம் தேதிகளில் வீரராக்கியம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை இயக்கப்பட்டு, வீரராக்கியத்திலிருந்து சேலம் வரை இயக்கப்படாது. மேலும், சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16812) 10, 13-ஆம் தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும்.
அந்த ரெயில் சேலத்திலிருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரிலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும். எனவே, ரெயில் சேவைகளில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து சேவை என்பது மக்களால் அதிகம் விரும்பப்படும் போக்குவரத்து வசதி ஆகும். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும், மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும் என்பதால் ரயில் பயணத்தை விரும்புவோர் ஏராளாம். அதுவும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக பயணிகள் சேவையில் ரயில்வே அமைச்சகம் தரம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. பட்ஜெட் விலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும்.
இரவு நேரப் பயணங்களில் படுக்கை வசதி இருப்பதால் சோர்வின்றி பயணிக்கலாம். பேருந்துகளில் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு அதிகமான உடமைகளை ரயிலில் எளிதாக எடுத்துச் செல்லலாம். பிற போக்குவரத்தை விட ரயில்கள் பாதுகாப்பான பயணத்தை வழங்குகின்றன. வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் சிக்கனமான பயண அனுபவத்தை ரயில்வே வழங்குகிறது. இட வசதி, கழிவறை மற்றும் படுக்கை விரிப்புகள் போன்ற வசதிகள் இருப்பதால், குடும்பத்துடன் பயணம் செய்ய இது சிறந்த தேர்வாக அமைகிறது. இதுபோன்ற வசதிகளால் நடுத்தர மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இந்த ரயில் பயணத்தை மேலும் மேம்படுத்துவதற்காகதான் ரயில்வே நிர்வாகம் பல்வேறு புனரமைப்பை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.






















