அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு: காரணம் குறித்து அமைச்சர் விளக்கம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேகமான சிகிச்சை மையத்தை திறந்து வைத்ததில் பெருமைப்படுகிறோம்.

தஞ்சாவூர்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதுதான் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற ரூ. 11.82 கோடி செலவில் 16 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு விழா, 2025 26 நிதியாண்டில் ரூ. 7.45 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 13 கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் வருமுன் காக்கும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ. 17 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ரூ. 1,000 முதல் ரூ. 4 ஆயிரத்தில் செய்து கொள்ளலாம். உயர் வருவாய் பிரிவினரும் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்பட 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோல மேலும் 9 மாவட்டங்களில் கட்டண சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை கட்டணம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் மொத்தம் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இன்றைக்கு ஒரு பிரத்தியேகமான சிகிச்சை மையத்தை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திறந்து வைத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இம்மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 65.80 கோடி மதிப்பில் 80 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ 23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவை தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு அடுத்த மாதம் வருகை தரும்போது திறக்கவுள்ளார்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 9.50 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏறக்குறைய 50 ஆயிரம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இவ்வாறு எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்காணித்து, பராமரிப்பதற்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. இது மிகவும் சிறப்பான திட்டமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) கோ. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் பி. கலைவாணி நன்றி கூறினார்.





















