விவசாயிகள் காத்திருக்க வேண்டாம்...அமைச்சர் சக்கரபாணி பெருமிதத்துடன் கூறியது எதற்காக?
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

தஞ்சாவூர்: அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தால் ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் கொள்முதல் செய்யும் போது 150 மெட்ரிக் டன் அதிவிரைவாக கொள்முதல் செய்யலாம். இதனால் விவசாயிகளில் காத்திருக்கும் நேரம் குறையும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பஞ்சநதிக்கோட்டையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தலைமை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் பஞ்சநதிக்கோட்டையில் ரூ.141 லட்சம் மதிப்பீட்டில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் நெற்பயிர்களுக்காக சுமார் 3000 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு காரிப் சீசனிலும் திறக்கப்படுகின்றன. அதில் 90 சதவீதம் டெல்டா மாவட்டத்திலேயே செயல்படுகின்றன. தற்போது ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளிடம் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 40 மெட்ரிக் டன் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. உச்ச அறுவடை காலத்தில் இது தற்போதைய தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே, கொள்முதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை கிராமத்தில் அமைத்துள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஒன்றில் முன்னோடி திட்டமாக ரூ.141 இலட்சம் மதிப்பீட்டில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல் வயலில் இருந்து நேரடியாக மூட்டை இல்லாமல் டிராக்டர், டிப்பர் மூலமாக நெல்லை அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் பெற முடியும். இதனால் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வரும்போது சாக்கு பயன்பாட்டை குறைக்கலாம். அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தொடர்ச்சியான கொள்முதல் செயல்முறை தயாரிப்புக்காக உயர்த்தி (எலிவேட்டர்) மூலமாக நேரடியாக சேகரிப்பு முனைக்கு மாற்றப்படும் அதன் கொள்ளளவு சுமார் 16 மெட்ரிக் டன் ஆகும்.
இதை சுத்தம் செய்யும்போது மாசுக்கட்டுப்பாடு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக சேகரிப்பு முனையிலிருந்து நெல் சுத்தம் செய்யப்படுகிறது. சூறாவளி தூசி தயாரிப்பான் இதில் இணைக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்தல் மற்றும் தரப்படுத்துதல் செயல்முறைக்கு பிறகு நெல் சேமிப்பு முனைக்கு இயந்திரத்தனமாக மாற்றப்பட்டு சேமிப்பு முறையிலிருந்து நெல் நேரடியாக தானியங்கி எடை மற்றும் தானியங்கி பேக்கிங் மூலம் மூட்டையாக தைக்கப்பட்டு கன்வேயர் மூலம் லாரிக்கு ஏற்றப்படுகிறது.
இதனால் விவசாயிகளின் நெல் சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக எடை போடப்பட்டு அதற்கு உண்டான பணப்பட்டுவாடாவும் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நெல் போக்குவரத்தை விரைவுப்படுத்த இதுபோன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த இயந்திரத்தின் கொள்ளளவு ஒரு மணி நேரத்திற்கு 15 டன் எடுத்துக் கொள்ளும். மேலும், ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் கொள்முதல் செய்யும் போது 150 மெட்ரிக் டன் அதிவிரைவாக கொள்முதல் செய்யலாம். இதனால் விவசாயிகளில் காத்திருக்கும் நேரம் குறையும்.
விரைவில் தேவைப்படும் அனைத்து மாவட்டங்களிளும் அதிதிறன் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு சன்ன ரகத்திற்கு 1,960 ரூபாயாக இருந்து 2,450 ரூபாயும், பொது ரகத்திற்கு 1,905 ரூபாயாக இருந்து 2,045 ரூபாயும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல ஊக்கத்தொகை நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 130 ரூபாயும், பொது ரகத்திற்கு 107 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூடுதலாக 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த குறுவைப் பருவத்தில் கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 36 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 62 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது சரித்திர சாதனை. பல்வேறு வாகனங்கள் மூலம் நெல் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திறந்தவெளியில் நெல் மூட்டைகள் நனைவதை தடுப்பதற்காக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, செமி குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 21 லட்சத்து 63 ஆயிரத்து 50 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் 27 லட்சத்து 72 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2,850 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு 3,293 நேரடி கொள்முதல் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 49 ஆயிரத்து 518 விவசாயிகள் பயனடைந்தனர். இந்த ஆண்டு 3 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 6,400 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.11 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. 1168 கோடி ரூபாய் பணம் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக செயற்பொறியாளர் குணசீலன், உதவி செயற்பொறியாளர்கள் தர்மராஜ், லாவண்யா, இளங்கோ, பைங்குழலி, விக்னேஷ், சதய விழாக் குழுத் தலைவர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















