புதுக்கோட்டை: கொடும்பாளூர் அகழாய்வில் கிடைத்த தங்க அணிகலன், பானை ஓடுகள்
16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலனான மணி, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் அதற்கு முந்தைய காலகட்டத்தின் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கொடும்பாளூரில் அகழாய்வில் தங்க அணிகலன் கிடைக்க தொல்லியல் ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் 16ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட தங்க அணிகலன் மற்றும் 10ம் நூற்றாண்டை சேர்ந்த பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட கண்காணிப்பாளரும், கொடும்பாளூர் அகழாய்வு இயக்குநருமான அனில்குமார் தலைமையில், துணை இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கினர்.
இதையடுத்து மூவர் கோயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், முசுகுந்தேஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலும் உள்ள அக்ரஹாரம் மேட்டுப் பகுதியில் 10 மீட்டர் நீள, அகலத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நான்கு மாதங்களாக அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் கண்டறியப்பட்டது. இது அகழாய்வு குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலனான மணி, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் அதற்கு முந்தைய காலகட்டத்தின் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கொடும்பாளூரில் கடந்த நான்கு மாதங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்க அணிகலன் கிடைத்திருப்பது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அப்போதே தங்கத்தால் ஆன அணிகலன்கள் மக்களின் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கான சான்றுகள் தற்போது கிடைத்துள்ளது. இத்தகவல் மக்கள் மத்தியில் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




















