கொள்முதலுக்கு தமிழக அரசு சரியான முன்னேற்பாடு செய்யவில்லை... விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டாமல் சாலைகளில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மணிகள் முளைத்துள்ளன.

தஞ்சாவூர்: கொள்முதலுக்கு சரியான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காததே கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம். மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்காதது காரணம் என்று அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்தார்.
தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டாமல் சாலைகளில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், சிபிஐ(எம்) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் பி.செந்தில்குமார், தஞ்சாவூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், சிபிஐ(எம்) மாவட்ட சங்கத்தின் கஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத்தலைவர் செயற்குழு உறுப்பினர்கள் என்.சுரேஷ்குமார், என்.சரவணன், வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கோ.அரவிந்தசாமி, மாவட்ட தலைவர் எஸ்.அர்ஜுன், ஒரத்தநாடு எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறுவை சாகுபடி பாப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தஞ்சையில் 1,97,500 ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 75,250 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 99,250 ஏக்கரிலும் குறுவை சாகுபடி நடந்து பெரும்பகுதி அறுவடை முடிந்துள்ளது. அறுவடை இன்னும் 25 சதவீதம் நடை பெற வேண்டிய நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்கும் தருவாயில் உள்ளது.
அறுவடை செய்யப்பட்ட நெல்கள், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மலைபோல் குவிந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆலக்குடி, தென்னமநாடு, ஒரத்தநாடு புதூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை ஆகிய இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்கள் தேங்கியுள்ளது. இந்த நெல்கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் அரசு உடன் கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் நடமாடும் கொள்முதல் (மொபைல் கொள்முதல்) செய்திட வேண்டும். நேரடியாக அறவை மில்களுக்கு நெல்லை அனுப்பி வைக்க வேண்டும். 22 சதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜுன் 12ல் திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2,12,247 ஏக்கர் கூடுதலாக நடந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு 5,87,875 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ள நிலையில் அரசு முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதலான கொள்முதல் நிலையங்களை திறந்திருக்க வேண்டும். அரசு இன்னும் கூடுதலான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏறத்தாழ 1 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரால் மூழ்கியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில வட்டங்களில் மழைநீரால் வெள்ளம் சூழ்ந்து நீர் தேங்கியுள்ளது. போர்கால அடிப்படையில் நீர்வளத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் வடிகால் வசதிகளை ஏற்படுத்திடவும், மழையால் நீர்சூழ்ந்துள்ள பகுதிகளை உடன் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்காதது காரணம் என்று அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















