புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் மூன்றாவதாக போலி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த குடோனுக்கு சீல் வைத்து ரூ. 30 கோடி மாத்திரைகள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்றாவதாக போலி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த குடோனுக்கு சீல் வைத்து ரூ. 30 கோடி மாத்திரைகள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
மூன்றாவதாக போலி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மூடல்
புதுச்சேரியில் போலி மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வரும் நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு போலி மாத்திரை தொழிற்சாலை பூர்ணாங்குப்பம் மற்றும் இடையார் பாளையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில், இடையார் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் சீல் வைக்கப்பட்டு, சுமார் ரூ. 30 கோடி மதிப்புள்ள போலி மாத்திரைகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே, பிரபல மருந்து நிறுவனங்களின் பெயரில் போலியான மருந்துகளைத் தயாரித்த இரண்டு தொழிற்சாலைகள் மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனை பாளையத்தில் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்த தொழிற்சாலைகள் மூலம் இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான போலி மருந்துகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த தொழிற்சாலைகள் மூலம் சுமார் ரூ. 2,000 கோடி வரை மருந்து விநியோகம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலையை நடத்திய ராஜா உட்பட 10 பேர் தலைமறைவாக உள்ளனர்.
சிபிசிஐடி ரெய்டு மற்றும் சோதனை
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போலி மருந்து தொழிற்சாலைக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர். நீதிமன்ற அனுமதி பெற்று, சிபிசிஐடி போலீஸார் மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் இணைந்து சோதனையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், மாத்திரைகளின் பேட்ஜ் எண்கள் பட்டியலை வைத்து போலி மாத்திரைகள் இருக்கிறதா என ஆய்வு நடத்தப்படுகிறது. 100 நல்ல மாத்திரைகளுடன் 400 போலி நிறுவன மாத்திரைகளை கலந்து விற்பனை செய்ததாகத் தெரிகிறது. பரிசோதனைக்காக மாதிரிகள் (சாம்பிள்கள்) எடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது தொழிற்சாலையில் பறிமுதல்
இந்த தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பூர்ணாங்குப்பம் பகுதியில் ஒரு போலி மாத்திரை தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் குடோன் இடையார் பாளையத்தில் கண்டறியப்பட்டது. அந்த குடோனில், 50-க்கும் மேற்பட்ட முக்கிய நோய்களுக்கு தற்போது பயன்படுத்தப்படும் மாத்திரைகள் போலியாக உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. போலி மாத்திரைகளைத் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் பேக்கிங் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 30 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





















