’தஞ்சையில் உணவு கடையா ?’ கலெக்டர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா..?
உணவு பொருட்களை விற்பனை செய்யும் இதர வியாபாரிகள், பெட்டிக்கடை வியாபாரிகள், வாகனங்களில் உணவு வணிகம் செய்வோர் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவுச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: உணவு வணிகம் மேற்கொள்ளும் வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவுச் சான்று கட்டாயம் தேவை என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி உள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இந்தியா முழுவதும் கடந்த 04.08.2011 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட சட்டத்தின்படி உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், இருப்புக்கிடங்குகள், ஹோட்டல் மற்றும் டிபன் ஸ்டால், டீக்கடை, மளிகை கடைகள், ஏற்றுமதி (ம) இறக்குமதியாளர்கள், உணவு பொருட்களை விற்பனை செய்யும் இதர வியாபாரிகள், பெட்டிக்கடை வியாபாரிகள், வாகனங்களில் உணவு வணிகம் செய்வோர் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவுச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமலோ அல்லது காலாவதி உரிமத்துடனோ உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, உணவு வணிகர்கள் கீழ்கண்ட பிரிவின்படி தங்களுடைய உரிமம், பதிவுச் சான்றிதழை (Foscos.gov.in, இ-சேவை மையம் அல்லது Food Safety Mithra) மூலமாக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உணவு வணிகம் செய்பவர்கள் உரிமம்,பதிவுச் சான்றிதழ் பெறாமல் உணவு வணிகம் செய்வது சட்டப்படி குற்றமாகும். உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் செய்தால் ரூ.5000 அபராதமும், உரிமம் இல்லாமல் உணவு வணிகம் செய்தால் வழக்கும் பதிவு செய்யப்படும்.
உணவு வணிகம் செய்து கொள்முதல் ரூ.12 இலட்சம் வரை இருந்தால் பதிவுச் சான்றிதழ் ரூ.100 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். ரூ.12 இலட்சத்திற்கு மேல் கொள்முதல் உணவு வணிகம் செய்பவர்கள் ரூ.2000 மற்றும் தயாரிப்பாளர்கள் மறுபொட்டலமிடுவோர் ரூ.3000, ரூ.5000, ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ரூ.7500 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதலால் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பினை முடித்த மாணவ-மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டத்தை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் துவக்கி வைத்து பேசியதாவது:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு உயர் கல்வி சேரும் மாணவர்கள், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோர்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்க்கையில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து தீர்வு காணும் வகையில் இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். இவற்றில் ஐடிஐ, பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 24 மாணவ, மாணவிகள் உடனடி சேர்க்கை பெற்று பயனடைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் (பொ) மாதவன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






















