அனைத்து வசதிகளும் தயார்... மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?
வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும்.

தஞ்சாவூர்: ஆடி வரும் அழகே... தஞ்சை தேரின் அழகே அழகு என்பது போல் நாளை மறுநாள் தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் தேர் அலங்கரிக்கும் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.
தஞ்சை மேலவீதியில் இருந்து தேர் நிறுத்தும் இடத்தில் தற்போது தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாளை மறுநாள் தேர் புறப்பாடு நடக்கிறது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். இந்த தேரின் சாதாரண உயரம் 19 அடி ஆகும். அகலம் 18 அடியாகும். தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும். இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன.

இந்நிலையில் நாளை மறுநாள் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேரின் முன்பகுதியில் குதிரை பொம்மைகள் வைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தேர் சுத்தப்படுத்தப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அனைத்து பணிகளும் முடிந்து தேரோட்டத்துக்கு தேர் தயாராகி விடும். இந்நிலையில் இன்று மதியம் தேர் அழகுப்படுத்தப்படும் பணிகளை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேவையான இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர் செல்லும் நான்கு ராஜவீதிகளிலும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நின்று பார்ப்பதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடமாடும் (வேன்) கண்காணிப்பு கேமரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி தேர் திருவிழா சிறப்பாக நடக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.





















