"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
திருச்சியில் இருந்து திருப்பதிக்கு 2 அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: இத... இதைதான் நாங்க எதிர்பார்த்தோம் என்று திருச்சி மக்கள் குதூகலம் அடைந்துள்ளனர் ஒரு அறிவிப்பால். என்ன அறிவிப்பு தெரியுங்களா? திருச்சியிலிருந்து திருப்பதிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பதுதான் அது.
திருச்சியில் இருந்து திருப்பதிக்கு நாளுக்கு நாள் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்கவும், தொழில் ரீதியாகவும் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்கின்றனர். அதேபோல் திருப்பதியில் இருந்தும் ஏராளமானோர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்ய மக்கள் வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டும் இதேபோல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகளானது இயக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் திருச்சியில் இருந்து இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வந்தது. தற்போது கோடை காலம் என்பதால் ஏசி பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அதிநவீன பேருந்துகளானது இயக்கப்பட இருக்கிறது. இதனை தமிழக முதல்வர் உத்தரவுபடி சிறப்பு பேருந்துகளானது இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருச்சியில் இருந்து திருப்பதிக்கு 2 அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பதற்குள் திருப்பதிக்கு குடும்பத்துடன் செல்ல நினைப்பவர்கள், கை குழந்தை உள்ள குடும்பத்தினர் என்று அனைவருக்கும் இந்த குளிர்சாதன பேருந்துகள் மிகவும் சௌகரியமான ஒன்றாகும். இதேபோல் திருப்பதிக்கு செல்ல விரும்பும் முதியவர்களுக்கும் இந்த குளிர்சாதன பேருந்துகள் சிறப்பான ஒன்றாகும். அதனால் அரசின் இந்த அறிவிப்பு திருச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல் திருச்சி வழியாகவும் பல்வேறு ஊர்களுக்கு அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கொளுத்தி வருவதால் மக்களுக்கு குளிர்சாதன வசதியுடன் இந்த பேருந்துகளானது இயக்கப்பட இருக்கிறது. மேலும் இதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கும் குளிர்சாதன பேருந்துகள் இயக்க வேண்டும் என்று சென்னை செல்லும் மக்கள் உள்பட பலரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் காரணமாக திருச்சி சென்னை இடையேயும் ஒரு சிறப்பு குளிர்சாதன பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்து சேவையை திருப்பதி, சென்னை செல்லும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எல்லாம் சரிதாங்க. கட்டணத்தையும் சரியான முறையில் நிர்ணயித்தால் போதும். அரசு இந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று திருச்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் திருச்சி மாவட்ட மக்கள் தற்போது மேலும் ஒரு கோரிக்கையை அரசு மற்றும் தெற்கு ரயில்வேக்கு விடுத்துள்ளனர். திருச்சி நகரம் முக்கியமான பகுதியாக மாறி வருவதால் திருச்சியில் இருந்து பொதுபோக்குவரத்தான ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். சமீபத்தில் திருச்சி மாவட்ட எம்பி துரை வைகோ திருச்சியில் இருந்து திருப்பதி, பெங்களூரு, எர்ணாகுளம் போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை தேவை என்பதை வலியுறுத்தி ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இதனைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து திருப்பதி போன்ற பகுதிகளுக்கு ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் விரைவில் இதற்கான கால அட்டவணை வெளியாகலாம் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இதனால் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி ரயில்களில் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















