ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது: 24 மணிநேரமும் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
தெற்கு ரயில்வேயில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி ஜங்ஷன், தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாள்கிறது.

தஞ்சாவூர்: சூப்பர் ஏற்பாடு... திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் திருச்சி ஜங்ஷனுக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். பயணிகளிடம் இருந்து பொருட்கள் திருட்டு போன்றவையும் தடுக்க முடியும்.
தெற்கு ரயில்வேயில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி ஜங்ஷன், தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாள்கிறது. காலை முதல் இரவு வரை எப்போதும் மக்கள் மற்றும் பயணிகள் நிறைந்து காணப்படும் ரயில்வே ஜங்ஷன் இது என்றால் மிகையில்லை. முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூர ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால் எப்போதும் வெளி மாவட்டத்தில் இருந்தும், இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிகள் இங்கு செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பழைய கண்காணிப்பு கேமராக்களுக்கு பதிலாக தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு அமைப்பை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய துல்லியமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருச்சி ரயில்வே கோட்டம், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கிய பகுதிகளை தெளிவாக கண்காணிக்கவும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்யவும் ஒரு அதிநவீன வீடியோ கண்காணிப்பு அமைப்பை நிறுவியுள்ளது. இந்த புதிய அமைப்பை ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி தொடங்கி வைத்தார். அவர், புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டு, கண்காணிப்பு வலையமைப்பு முழுமையாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்தார்.
சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு, பழைய சிசிடிவி அமைப்புகளை மாற்றி, இந்த புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், காத்திருப்பு அறைகள், முன்பதிவு கவுண்டர்கள், வாகன நிறுத்துமிடங்கள், நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, ரயில்வே யார்டுகள், முக்கிய நுழைவாயில், கூடுதல் நுழைவாயில்கள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் அனைத்து முக்கிய பகுதிகளிலும் மொத்தம் 185 உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திருச்சி ஜங்ஷன் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் மற்றும் உறவினர்களை அனுப்பி வைக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் ரூ.2.26 கோடி செலவில் இந்த புதிய ஐபி-அடிப்படையிலான (IP-based) அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பழைய சிசிடிவி நெட்வொர்க்கை விட மிக விரிவான மற்றும் கூர்மையான காட்சிகளை வழங்குகிறது. இதில் முழு ஹெச்.டி. மற்றும் அல்ட்ரா ஹெச்.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, பிரத்யேக கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெரிய திரைகளில் காட்சிகள் காண்பிக்கப்படும்.
இந்த அதிநவீன வசதி, பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும். திருட்டு, துன்புறுத்தல், சங்கிலி பறிப்பு, அனுமதியின்றி நுழைதல் போன்ற சம்பவங்களை ரயில் நிலைய வளாகத்தில் எங்கு நடந்தாலும் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இது உதவும். இது பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.





















