Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் இயங்குமா என்பது குறித்து, அமைச்சர் சிவசங்கர் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதற்கு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.
“தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்“
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள திமுக-வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்ட் சட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்குமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையான அளவில் பேருந்துகளை இயக்க, போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
எதற்காக பொது வேலைநிறுத்தம்.?
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்தப்பட உள்ள 4 சட்டத் தொகுப்புகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் இந்த போராட்டம் நடத்துகின்றன.
சம்பளம் பிடித்தம் - தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் அதரவு தெரிவித்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியானது.
அதோடு, வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வங்கிகள் விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை.
மேலும், அனைத்து துறைகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால், பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி, நாளை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, “No Work, No Pay“ என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.





















