Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
Online Property Registration : இணையவழி தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறை 17-08-2026 முதல் கட்டாயமாக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைனில் பத்திர பதிவு
நவீன காலத்தில் வீட்டிற்குள் இருந்தே எந்த பொருட்களையும் வாங்கும் நிலைக்கு மாறியுள்ள நிலையில், பத்திர பதிவிற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், " பதிவுத்துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு" தொடர்பான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் 2026-ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லோகேஷ், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24 x 7 × 365) இணையவழி தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)" நடைமுறை 17-08-2026 முதல் கட்டாயமாக்கப்படுகிறது. கீழ்க்கண்ட ஆவணங்களைப் பொறுத்து
அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)
ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)
புதிய நடைமுறை
1. பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை (Login) தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள். எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.
3. ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
4. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.
5. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.
6. சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண இரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் இணையவழியில் அனுப்பி வைக்கப்படும். ஆவணதாரருக்கு
7. பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
8. பதிவுச்சட்டம், 1908-ல் விதி 32,52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு, இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
9. இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும்.
தொழில்நுட்ப தேவைகள்
தேவைப்படும் ஆவணங்கள்
1. இணைய இணைப்பு
2. ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல் 0 & எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப் படலம் கவரும் கருவி
3. புகைப்படக்கருவி (Webcam)
இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















