Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
முதல்வர் விஜயை ஒருமையில் பேசி விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சிறைக்கு சென்றுள்ள நிலையில், அவரது மகன் அக்ஷய் கோபத்தில் விஜயின் மகன் பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல் மிரட்டல் விடுத்த விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரக்குறைவாக பேசிய மார்க்கண்டேயன்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட்டு மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18ம் தேதி அப்பகுதியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசினார்.
குறிப்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதால் கதவுகளை அடைக்க வேண்டும் என விஜய் பேசிய கருத்தை குறிப்பிட்டு, கதவை அடைத்தால் எலும்பை உடைப்பேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் வார்த்தைகளை கொட்டினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் கடுப்பான தவெகவினர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் புகாரளித்தனர்.
வீடு புகுந்து கைது செய்த போலீசார்
இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று காலையில் மார்க்கண்டேயன் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். முதலில் போலீசாரிடம் சபாநாயகர் அனுமதி இல்லாமல் கைது செய்ய முடியாது என ரூல்ஸ் பேசிய மார்க்கண்டேயனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட விவகாரம் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்து நழுவ மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
15 நாட்கள் நீதிமன்ற காவல்
மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சுமதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கு விவரங்களையும், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்
இதற்கிடையில் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் மகனான அக்ஷய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மூளை தான் நம் உடம்பில் எல்லாம் முடிவு செய்கிறது. அப்படிப்பட்ட மூளையாக இருப்பது தான் சட்டமன்றம். அதனுள் எல்லா எம்.எல்.ஏ.,க்களையும் அடைத்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். அதன்மூலம் தாங்கள் நினைத்த சட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறார். வரலாறு இதுபோன்ற பல விஷயங்களைப் பார்க்கிறது.
ஒரு அவதூறு வழக்கில் எவ்வளவு மணி நேரம் விசாரிக்கிறீர்கள். 13 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. எங்க அப்பாவுக்கு உடல்நல பிரச்னைகள் இருக்கிறது. அவரை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். உங்க பையன் தான் உங்க கூட இல்லை முதலமைச்சர் அவர்களே, எங்க அப்பா எனக்காகவும், விளாத்திக்குளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் பண்ணாதீர்கள்” என தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















