திரிஷா இந்த நாட்டின் பிரதமரா? உதயநிதி கைதுக்கு ஆவேசமான ஆர்.எஸ். பாரதி
இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞர் என்று அழைப்பதற்கு விஜய் வழிவகுத்துள்ளார் - ஆர்.எஸ்.பாரதி

கைது நடவடிக்கை மூலமாக உதயநிதி ஸ்டாலினை "இளைய கலைஞர்" என்று அழைப்பதற்கு வழிவகுத்துள்ளார் முதல்வர் விஜய் என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “ஆட்சியில் இருக்கும் விஜய் எல்லா ஆட்சியையும் மிஞ்சும் அளவிற்கு சர்வாதிகாரத்தின் உச்சத்திலிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது எத்தகைய ஜனநாயக விரோத செயல்.?
இந்திய ஜனநாயகத்தை கண்டிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது. விஜய் ‘ஜனநாயகன்’ என்ற படத்தில் நடித்தாரே தவிர ஜனநாயகம் குறித்து ABC கூட தெரியாதவர்தான் முதலமைச்சர். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் செய்ய வேண்டிய வேலையைத்தான் செய்துள்ளார். மு.க ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு சரியாக தண்ணீர் வந்து சேர்ந்தது. இதுகுறித்து பேசும்பொழுது கூட்டத்தில் இருந்து யாரோ திரிஷா'வை பற்றி பேசி உள்ளார்கள்.
திரிஷா வீட்டில் மட்டும் தண்ணீர் வருகிறதா என யாரோ கூட்டத்தில் கேட்டார்கள். அதற்கு, ஆம் அவர்கள் (திரிஷா) வீட்டில் மட்டும் தண்ணீர் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது? திரிஷா வீட்டில் தண்ணீர் வருகிறதா என யாரோ கேட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திரிஷா வீட்டில் மட்டும் தண்ணீர் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் என்ன உலக மகா தவறு இருக்கிறது?
திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? அவரே தனிப்பட்ட முறையில் எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் ஆரவாரத்தில் பேசுவது வாடிக்கை. இதை தாங்கிக் கொள்ள முடியாமல் கைது நடவடிக்கையை கையாண்டுள்ளது. எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் ஏன் எடப்பாடியார் காலத்திலும் இதுபோன்ற நிறைய பேசி உள்ளோம். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதியப்பட்டது இல்லை. அவதூறு பேச்சு என்ற வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை செய்யப்பட்டதே கிடையாது.
கைது நடவடிக்கை காரணமாக உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞராக மாற்றி வருகின்றனர். இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞர் என்று அழைப்பதற்கு விஜய் வழிவகுத்துள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து விட்டு ஆளில்லா மைதானத்தில் பந்தாட நினைக்கிறார் முதல்வர். சட்டமன்றத்தில் பதில் கூற பயந்துதான் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர்” என்றார்.
திரிஷாவை மறைமுகமாக அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் எந்த அசிங்கம் வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த அசிங்கத்தில் இதுவும் ஒன்று என்றால் அதை தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பதிலளித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















