CM on Paddy: நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
2025-26 கொள்முதல் பருவத்தில், வரும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து நெல் கொள்முதலை தொடங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

2025-26 கொள்முதல் பருவத்தில் 1.9.2025 முதல் நெல் கொள்முதல் தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் அறிக்கை
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் 1.9.2025 முதல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500 என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று ஆணையிட்டுள்ளார்கள். இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றிற்குச் சன்னரகத்திற்கு ரூ.156 மற்றும் பொதுரகத்திற்கு ரூ.131 அடங்கும். திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லிற்கு ரூ.2500 வழங்குவோம் என்று குறிப்பிட்டதை நிறைவேற்றியுள்ளோம் என்பதைத் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு நம் முதல்வரின் பொற்கால ஆட்சியில் 29.08.2025 வரை 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் 51 மாத கால ஆட்சியில், இதுவரை மொத்தம் 2.15 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 44,777.83 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.2,031.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதமே அக்டோபரில் தொடங்கும் பருவ விலையில் நெல் கொள்முதல் செய்திட முதலமைச்சர் அவர்கள், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்று, 2022-2023 ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருவதுபோல், இந்த ஆண்டும் செப்டம்பர் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.
“ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது” என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதால், திறந்த வெளியில் வைக்காமல் இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங்கள் கட்ட ஆணையிட்டார்கள். 333 கோடியே 7 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 4 லட்சத்து 3 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 25 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
2025 – 2026 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட
20 நவீன சேமிப்பு வளாகங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நவீன சேமிப்பு வளாகங்கள் என ஆக மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 26 நவீன சேமிப்பு வளாகங்கள், 469 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றைக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆக மொத்தம், இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி ரூ.827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில், 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 57 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், வருங்காலங்களில் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்க வேண்டிய தேவை எழாது. இந்த ஆண்டு நெல்வரத்து அதிகமாக வரலாறு காணாத வகையிலிருந்தாலும், எதிர்பாராது அடிக்கடி மழை பெய்தபோதும், நெல்மணிகள் மழையில் நனையாமல் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, வருகின்ற 2025-26 பருவத்தில் நெல் கொள்முதலை செப்டம்பர் முதல் நாளிலிருந்து தொடங்கிட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல் மையங்களிலிருந்து நேரடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு நெல்லை அனுப்பிடவும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து நெல் விவசாயிகளும் புதிய விலையில் நெல்லினை விற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் சக்கரபாணி அவரது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளா.





















