Nainar Nagendran: சிலிண்டர் தட்டுப்பாடா?... உங்களுக்கு நான் வாங்கி தாரேன்.. நயினார் நாகேந்திரன் பதிலடி!
ஒரு வாடிக்கையாளர் ஒருமுறை சிலிண்டர் பெற்று விட்டால் இரண்டாவது சிலிண்டருக்கு 20 நாட்கள் கழித்து தான் முன்பதிவு செய்ய முடியும். அதனால் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் தகவலில் உண்மையில்லை என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் தட்டுப்பாடு - பரிதவிக்கும் மக்கள்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலானது உலக நாடுகளை வெகுவாக ஆட்டம் காண வைத்துள்ளது. குறிப்பாக உலகம் முழுவதற்கும் இயற்கை எரிவாயு வழங்கப்படும் ஹார்மூஸ் நீர்வழிப்பாதை கடந்த 15 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல்கள் அதனை உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
இதனிடையே ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கத்தாரில் உள்ள எண்ணெய் வளங்கள் பாதிக்கப்பட்டதால் இந்தியாவில் பல மாநிலங்களில் கேஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் கிடைக்க தாமதமாகலாம் என அதனை விநியோகம் செய்யும் எரிபொருள் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக ரீதியிலான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் டீ, காபி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது. மக்களும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த தகவல்களால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த விவகாரத்தில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு, “சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க முதலமைச்சர் சொன்ன பொய். கள நிலவரம் அப்படி இருக்கிறது என சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். நானே ஒரு கேஸ் சிலிண்டர் டீலர் தான். ஒரு வாடிக்கையாளர் ஒருமுறை சிலிண்டர் பெற்று விட்டால் இரண்டாவது சிலிண்டருக்கு 20 நாட்கள் கழித்து தான் முன்பதிவு செய்ய முடியும். ஒரு சிலிண்டர் குறைந்தது 30 முதல் 40 நாட்கள் வரை பயன்படும். அதனால் அடுத்த சிலிண்டர் 20 நாட்கள் கழித்து தான் முன்பதிவு செய்யும் வகையில் இணையதளம் செயல்படுகிறது. அதனால் தான் இதை சொல்கிறேன். தட்டுப்பாடெல்லாம் எங்கேயும் கிடையாது. அடுத்த 20 நாட்களுக்கு தேவையான சிலிண்டர் கையிருப்பில் உள்ளது. எங்கு வேண்டுமானாலும் நான் சிலிண்டர் தர சொல்கிறேன்.
ஹோட்டலில் உணவு வகைகளை குறைப்பதற்கும், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கும் எந்த காரணமும் இல்லை. அப்படி எழுதி போட்டவர்கள் எதிர்க்கட்சிக்காரர்களாக இருக்கும். இன்னைக்கு உலகமெங்கும் போர் நடக்கிறது. நம்ம இந்தியாவை பொறுத்தவரை பொருளாதார கட்டுப்பாடு என்பது கிடையாது. உலகெங்கும் கச்சா எண்ணெய் விலையால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரு பைசா கூட உயரவில்லை” என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















