மேடையிலே அடித்துக் கொண்ட திமுக MP - MLA... ஷாக்கில் உறைந்த கலெக்டர் - தேனியில் பஞ்சாயத்து!
தேனியில் நடந்த நலன் காக்கும் ஸ்டாலின் நலத்திட்ட நிகழ்ச்சி மேடையிலே திமுக எம்.பி. தங்கத் தமிழ்ச்செல்வனும், திமுக எம்.எல்.ஏ. மகாராஜனும் சண்டையிட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களின் இலவச முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கான நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதியில் தொடங்கி வைத்தனர்.
மேடையிலே சண்டை போட்ட திமுக எம்பி - திமுக எம்.எல்.ஏ:
தேனியிலும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை திமுக எம்பி தங்கத்தமிழ்ச் செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் முன்பு தொடங்கி வைக்கும் விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பயனாளர் ஒருவருக்கு சான்றிதழ் வழங்கும்போது ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் சான்றிதழ் வழங்கினார். அப்போது, மறுபக்கத்தில் எம்பி தங்கத்தமிழ்ச்செல்வன் நின்று கொண்டிருந்தார்.
அவர் தானும் சான்றிதழில் கை வைக்க முயற்சித்தார். பின்னர், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அவரிடம் இருந்து சான்றிதழை பறிப்பது போல பின்னோக்கி இழுத்தார். பதிலுக்கு தங்கத் தமிழ்ச்செல்வனும் சான்றிதழை தன் பக்கம் இழுத்தார். மேடையிலே யார் சான்றிதழ் கொடுப்பது என்பதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மல்லு கட்டினர். அப்போது, மக்களவை உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மகாராஜனைப் பார்த்து முட்டாள் என்று கூறியதாக கூறப்படுகிறது.
ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் திட்டு:
தேனி : திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வனை மேடையிலேயே ராஸ்கல் என்ற திமுக எம்எல்ஏ மகாராஜன்#Theni #DMK #ThangaTamilSelvan #Maharajan #abpnadu pic.twitter.com/cSjxp0Gi9e
— ABP Nadu (@abpnadu) August 2, 2025
பின்னர், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வனை நீ யாரு என்று ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தங்கத் தமிழ்ச்செல்வனும் பதிலுக்கு அவரைத் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை மேடையில் இருந்த தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், விழாவில் பங்கேற்ற பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மேடையில் இருந்த அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ:
திமுக-வின் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் பொதுமக்கள் நலத்திட்ட விழாவில் மக்கள் முன்பே ஒருமையில் திட்டி, மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருவர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத் தமிழ்ச்செல்வன் மீது அதிருப்தி:
தங்கத் தமிழ்ச்செல்வன் அதிமுக-வில் இருந்து திமுகவிற்கு வந்தவர். எடப்பாடி பழனிசாமி - சசிகலா மோதலுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். தினகரன், சசிகலா ஆதரவாளராக இருந்து வந்த தங்கத் தமிழ்ச்செல்வன் பின்னர் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.
திமுக-வில் இணைந்த அவருக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியது. இது தேனி திமுக-வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கட்சியில் காலம் காலமாக உழைத்தவர்களுக்கு பதில் புதியதாக வந்தவருக்கு எம்பி சீட் அளித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலிலே, இன்று நடந்த விழாவில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜனுக்கும், எம்பி தங்கத் தமிழ்ச்செல்வனுக்கும் மோதல் உண்டாகியுள்ளது.




















