மேலும் அறிய
கேசரி பவுடர், காஃபி தூள்.. வாயால் மரம் வரைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ஓவியர்..
மறைந்த நடிகர் விவேக் நினைவாக ஓவிய ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான முறையில் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கேசரி_தூள்-காபி_தூளில்_வரையப்பட்ட_படம்
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 16-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் மறுநாள் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்தனர். பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள், கையில் மரக்கன்றுகள் ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த நடிகர் விவேக், அப்துல்கலாமின் பசுமை கனவை நிறைவேற்ற தொடர்ந்து ஆகச்சிறந்த பணிகளை செய்து வந்தார். அவரின் இறப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போதும் அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் மறைந்த நடிகர் விவேக் நினைவாக வாயில் வண்ணங்களை கொண்டு கொப்பளித்து மரத்தின் படத்தை வரைந்தார் விழிப்புணர்வு ஏற்படுத்தி அஞ்சலி செய்தார். இந்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து ஓவியர் செல்வம் நம்மிடம்....," ஓவிய ஆசிரியராக பணியாற்றும் எனக்கு சமூக அக்கறையும் உள்ளது. அதனால் என்னுடைய ஓவியங்களை கருவியாக பயன்படுத்தி சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறேன். தாடியில் அப்துல்கலாம், நாற்றில் பாரதி, சாக்பீசில் அம்பேத்கர் என தலைவர்களின் உருவகங்களில் ஓவியமாக மாற்றியுள்ளேன். சோப்பில் படம் வரைதல், பாட்டிலில் படம் வரைதல் நாணயங்களை பயன்படுத்தி படம் வரைதல், மணல் சிற்பங்கள் என பலவற்றில் ஓவியம் செய்துள்ளேன்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்பதை தெரிவிக்கும் வகையில் முட்டிபோட்டு ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு வழிமுறை என்பதை உள்ளங்கையில் வரைந்து சாதனை செய்துள்ளேன். கலாம் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் வேல்ட் ரெக்கார்ட், சோழன் உலக சாதனை என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன். தற்போது சின்ன கலைவாணர் விவேக் மறைவு மிகவும் வருத்தமடைய செய்தது. எனவே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மரங்கள் நடவேண்டும் என்ற நோக்கதிலும் பச்சை நிற கேசரி பவுடர், மற்றும் காஃபி தூள் பயன்படுத்தி கலவையாக என்னுடைய வாயில் எடுத்துக்கொண்டு அதனை உமிழ்ந்து மரம் ஓவியம் ஒன்றை வரைந்தேன். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் மரம் வளர்க்க ஆரம்பித்துவிட்டால் கலாம், விவேக் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியதாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் மரம் வளர்ப்பு தொடர்பாக அப்துல்கலாமின் அண்ணனின் பேரன் சேக் சலீம் நம்மிடம்...," ஒரிசாவில் உள்ள வீலர் ஐ லேண்டில் 1995-ல் தாத்தா கலாம் முயற்சியால் மரங்கள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரம் வளர்ப்பு அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. ராஸ்ட்ரிய பவனில் மூலிகை தோட்டம் வைத்தது முக்கியமான செயல். 120 கோடி மக்கள் 120 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது தாத்தாக கலாமின் மிகப்பெரும் பசுமை திட்டமாகும். தொடர்ந்து நடிகர் விவேக்கிடம் மரம் வளர்ப்பு தொடர்பாக பேசி மரக்கன்று நட கேட்டுக்கொண்டார்.
அதனை உறுதி மொழியாக எடுத்துக்கொண்ட விவேக் 1 கோடி மரங்களை நட முயற்களை மேற்கொண்டார். ஒரு முறை கடலூரில் 10 லட்சம் மரங்களை நடுவதற்கு கலாம் ஐயாவை அழைத்து நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டுவைத்து பெரும் புரட்சி செய்தார். தற்போது அவரின் இறப்பு ஈடு செய்யமுடியாது. நடிகர் விவேக் விதைக்கப்பட்டுள்ளார். இன்னும் பல கோடி மரங்களாக வளர்ந்து நம்மோடு இருப்பார். மரங்கள் நடுவதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் வரவேற்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும் படிக்கவும்























