![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Liquor License: திருமண மண்டபத்தில் மதுபானம் - தமிழக அரசின் சட்டத் திருத்தம் நீக்கம்
வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
![Liquor License: திருமண மண்டபத்தில் மதுபானம் - தமிழக அரசின் சட்டத் திருத்தம் நீக்கம் tamilnadu government squashes Liquor License after heavy controversy Liquor License: திருமண மண்டபத்தில் மதுபானம் - தமிழக அரசின் சட்டத் திருத்தம் நீக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/898ca6a9d4f8b1fc3ab1830354ef00381672283981171234_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு உரிமம் வழங்குவதற்கான அறிவிக்கை நீக்கம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழக அரசு காலையில் வெளியிட்ட அறிவிப்பை மாலையில் திரும்பப் பெற்றுள்ளது.
சட்ட திருத்தம் நீக்கம்:
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு. தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commercial Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Convention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்ப்புகளால் முடிவை மாற்றிய அரசு:
பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வரும் நிலையில் விளையாட்டு மைதானங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என காலையில் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மது விலக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)