ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய புதிய கடுமையான விதிமுறைகள் அமல், பொதுமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்வதற்குப் புதிய நடைமுறைகளும், கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு தற்பொழுது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகளின்படி, முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரரின் தற்போதைய வீட்டுச் சமையல் எரிவாயு (காஸ் சிலிண்டர்) ரசீதுடன் சேர்த்து, அவரது தந்தை மற்றும் மனைவியின் தந்தை ஆகியோரது வீடுகளின் காஸ் சிலிண்டர் ரசீதுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக, வாடகை வீடு மாறுவோர் அல்லது புதிய இடங்களுக்குக் குடிபெயர்வர் தங்களது ரேஷன் கார்டு முகவரியை மாற்றுவதற்கு, அரசின் பொது விநியோகத் திட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, புதிய முகவரியைப் பதிவு செய்து, அதற்குரிய முகவரிச் சான்றாக 'ஆதார் கார்டு' உள்ளிட்ட ஏதேனும் ஒரு முக்கிய ஆவணத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் அந்த ஆவணங்களைப் பரிசீலனை செய்து, சரிபார்த்து முகவரி மாற்றத்திற்கு ஒப்புதல் அளிப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால், தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் காரணமாக, ஆன்லைன் மூலம் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் வீட்டுச் சமையல் காஸ் சிலிண்டர் ரசீது கண்டிப்பாகக் கேட்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, கூடுதல் நிபந்தனையாக விண்ணப்பதாரரின் தந்தை மற்றும் மனைவியின் தந்தையுடைய வீடுகளின் காஸ் சிலிண்டர் ரசீதுகளும் கட்டாயமாகக் கேட்கப்பட்டு வற்புறுத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர்களின் குற்றச்சாட்டுகளும், நடைமுறைச் சிக்கல்களும்
இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தங்களது கடுமையான அதிருப்தியையும், வேதனையையும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, "ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வதற்காக ஆதார் கார்டு, மின் கணக்கீட்டு அட்டை (EB Card), வங்கி கணக்கு புத்தக நகல் (Bank Passbook) உள்ளிட்ட அனைத்து முறையான ஆவணங்களுடன், தற்போதைய காஸ் ரசீதை இணைத்து விண்ணப்பித்தாலும் கூட, ஆன்லைனில் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டால், விண்ணப்பதாரர் தங்கியுள்ள தற்போதைய முகவரியில் உள்ள காஸ் ரசீது, அவருடைய தந்தை வீட்டிற்குரிய காஸ் ரசீது மற்றும் மனைவியின் தந்தை வீட்டு காஸ் ரசீது என மூன்று பேரின் காஸ் சிலிண்டர் ரசீதுகளையும் இணையதளத்தில் முறையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இதே போன்றதொரு கடுமையான நடைமுறையைத் தான், ரேஷன் கார்டில் இருந்து உறுப்பினர் பெயரை நீக்கம் செய்வதற்கும் அதிகாரிகள் தற்பொழுது பின்பற்றி வருகின்றனர்" என்று குற்றம் சாட்டுகின்றனர்.
நடைமுறை சிக்கல் என்ன ?
மேலும், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்களது ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய முற்படும் போது, இந்த விதிமுறை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள், தங்களது காஸ் சிலிண்டர் ரசீதுகளை இவர்களுக்குத் தர மறுக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களை ஏற்கும் மனநிலையில் இல்லாத பெற்றோரிடம் இருந்து எப்படி காஸ் ரசீதுகளைப் பெற்று அதிகாரிகளிடம் வழங்க முடியும் என்று பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது நடைமுறைச் சிக்கல்களைக் கூறி கேள்வி எழுப்பியுள்ளனர். அரசின் இந்த புதிய கடினமான விதிமுறைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ரேஷன் கார்டுகளில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















