“இனியும் தாமதித்தால் டெல்டா பாலைவனமாகும்” - மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்க்கு துரைமுருகன் கொடுத்த எச்சரிக்கை
தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சியினருடன் மத்திய அரசை அணுக வேண்டும் - முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தானது என்று முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் நீர்வளதுறையிடம் கேள்விகளை கேட்டார். அதற்கு நீர் வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதிலை கண்டு எனக்கு அதிர்ச்சியானது. காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரியின் கடைமடை மாநிலங்களான தமிழ்நாடு, பாண்டிச்சேரியிடம் ஆலோசிக்காமல் எந்த நீர்தேக்கத்தையும் அமைக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் வேண்டுமென்றே மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அப்படி எந்த தடையும் ஆலோசனையும் பெற வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என கூறுவது அபத்தமானது.
அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துங்க
ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூடவா தெரியாமல் போய்விடும் இது ஆபத்தானது. எனவே தமிழக அரசு மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் கூட்டி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி டெல்லியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் கர்நாடகா சென்று மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தை உருவாக்கும். நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதமாக இருக்கும்போது நாம் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த கூடாது. கர்நாடகாவில் மேகதாது அணை காவிரி நீர் பிரச்சனையில் எல்லா கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றனர்.
அதே போல் தமிழகத்திலும் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஏற்கனவே கடை மடை எல்லாம் காய்ந்து பயிர்கள் கருகி போய் உள்ளன காவிரியில் அவர்கள் தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பதை கர்நாடகா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளும். எனவே சட்டவல்லுநர்களையும் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி சென்றோம். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூட இதற்காக உண்ணாவிரதம் இருந்தார். இந்த விவகாரத்தில் கொந்தளிக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக உள்ளது. மேகதாது விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் கன்னடர்கள் போராட்டம் நடத்துவதால் அங்குள்ள தமிழர்கள் நிலை என்ன ஆகும் என தெரியவில்லை.
நாங்கள் தீய சக்தி என்பதால் கேட்கவில்லை
நீர் வளத்துறையை நான் கவனித்து வந்தேன் என்பதால் பொறுக்க முடியாமல் உங்களை சந்தித்து இதனை கூறுகிறேன். சட்டபூர்வமாக பெற்ற உரிமை பறிபோய்விடுமோ என்ற நிலை உள்ளது. முதல்வரோ இந்த விவகாரத்தில் எல்லோரிடமும் ஆலோசனை கேட்பதாக கூறுகிறார். ஆனால் எங்களிடம் கேட்கவில்லை நாங்கள் தீய சக்தி என்பதால் கேட்கவில்லை போலும் இனியும் காலதாமதம் செய்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் மத்திய சர்காருடன் ஒத்து போகிறேன் என தமிழக முதல்வர் சொல்கிறார். அப்போது இந்த மேகதாது விவகாரத்தை மத்திய அரசுடன் தமிழக முதல்வர் பேச வேண்டியதுதானே இது கட்சி பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த எல்லா கட்சி நண்பர்களுடன் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்.
தமிழகத்தை திசை திருப்பதான் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் கொடுத்த அறிக்கையே தவறு உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புரிமை வழங்கப்பட்டது தமிழகத்திற்கு அவ்வாறு தவறான அறிக்கையை வெளியிட்ட மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டும். ஆனால் ஆளுங்கட்சி திட்டினாலும் பரவாயில்லை காவிரி பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் கர்நாடகாவுக்கு மேகதாது பிரச்சணை குறித்து பேச சென்றதும் அப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பில்லை. ஆனால் இப்போது தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துவிட்டது. பிறகு எதற்காக தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு பேச்சுவார்த்தை செல்ல வேண்டும். தமிழக முதல்வர் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசிப்பதாக கூறியுள்ளார். ஆனால் எங்களை கலந்தாலோசிக்கவில்லை, என்னை கலந்தாலோசிக்கவில்லை, நான் தீய சக்தியின் பொதுச்செயலாளர், என்னை அழைப்பாரா?.
இதைவிட கேவலம் எதுவுமில்லை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டது அவமானமாகும். இதைவிட கேவலம் வேறு எதுவுமில்லை. நமது பாடலை கூட பாட அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இதனை வேறு விதமாக கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதனை அரசாங்கம் விட்டு கொடுக்காமல் பயங்கரமாக எதிர்க்க வேண்டும். தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தபடுகிறது தமிழன் என்ன கதி ஆவானோ என வயிறு எரிகிறது. சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டராக உள்ள சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரே அடிமட்ட வேலையை செய்கிறார்” எனக் கூறினார்.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















