புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு.! விஜய் முதல் உதயநிதி வரை- சட்டசபையில் இன்று என்ன நடக்கும்.?
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர். இந்த நிலையில் பதவியேற்பிற்கான வழிமுறைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பையை புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ள நிலையில் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்
முதலில் பதவியேற்பது யார்.?
சட்டசபையில் அலுவல்களை தற்காலிக சபாநாயகர் ஏற்று நடத்துவதற்கு முன், அதற்குரிய உறுதிமொழியை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனையடுத்து முதலில், முதலமைச்சர் விஜய் அடுத்ததாக அமைச்சர்கள், இதனை தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா ஆகியோர் பதவியேற்பார்கள். அடுத்ததாக தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சட்டசபை செயலர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அழைத்ததும் ஒவ்வொருவராக வந்து, சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை, சட்டசபை செயலரிடம் கொடுக்க வேண்டும். அப்போது உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கான வாசகங்கள் அடங்கிய படிவம் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உறுதிமொழி- கூடுதல் வார்த்தைகள் சேர்க்க கூடாது
உறுதி மொழி படிவத்தில் 'உளமார உறுதி கூறுகிறேன்' என்றும், 'கடவுளறிய உறுதி கூறுகிறேன்' என்றும் இரண்டு வாசகங்கள் இருக்கும். எனவே உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி ஏதாவது ஒரு முறையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். மேலும், இப்படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இருக்கும். உறுப்பினர்கள் தம் விருப்பப்படி ஏதாவது ஒரு மொழியில் உறுதிமொழி எடுக்கலாம். படிவத்தில் உள்ள வாசகங்களை மட்டுமே படிக்க வேண்டும்.
அதை கூட்டவோ, குறைக்கவோ கூடாது. உறுதிமொழி எடுக்கும் கடமை மிகவும் புனிதமானது. புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர்களைத் தவிர, மற்ற உறுப்பினர்களுக்கு சபையில் அமர தனி இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சபாநாயகர் தான் புதிய உறுப்பினர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கீடு செய்து தருவார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















