![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM MK Stalin Letter: ”20 நாட்கள்தான் தாங்கும்.. குறுவையை காப்பாற்ற இதுதான் வழி” - ஜல்சக்தி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜல்சக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
![CM MK Stalin Letter: ”20 நாட்கள்தான் தாங்கும்.. குறுவையை காப்பாற்ற இதுதான் வழி” - ஜல்சக்தி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம் Tamil Nadu CM has sent a letter to the Minister of Jalsakthi asking that cvauvery water release immediately to carry out croping without any hindrance. CM MK Stalin Letter: ”20 நாட்கள்தான் தாங்கும்.. குறுவையை காப்பாற்ற இதுதான் வழி” - ஜல்சக்தி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/b3d56fc07f421d78c70ae4cf34b41d7f1689841120751589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிட உத்தரவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜல்சக்தி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஜல் சக்தி அமைச்சரிடம் வழங்கினார்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே என்றும் இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26,32 டி எம்.சி. என உள்ள நிலையில் 22.54 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர் வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பிலிகுண்டுலு வரை பாய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை என்றும், இதனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்றும் தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும் என்றும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை குறைவாக இருப்பதால் குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும் குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அது 70,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாகவும், தண்ணீர் தேவைக்கும் நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும் எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் கடந்த 5-7-2023 அன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட்டு தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டதை தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் 3-7-2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 4-7-2023 தேதியிட்ட தனது கடிதத்தில் உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிட உத்தரவிடுமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)