CM Stalin: நிலக்கரி ஏல ஒப்பந்தம்; டெல்டா விவசாயிகளுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் !
MK Stalin: டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
![CM Stalin: நிலக்கரி ஏல ஒப்பந்தம்; டெல்டா விவசாயிகளுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் ! Tamil Nadu Cheif Minster MK Stalin Writes a letter to PM Narendra Modi to withdraw coal mining projects in Tanjore CM Stalin: நிலக்கரி ஏல ஒப்பந்தம்; டெல்டா விவசாயிகளுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/869af981c77a927b388602fccbb443181680606695315333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைப்பது டெல்டா விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை ஓரத்தநாடு பகுதியில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.வேளாண் மண்டலத்தில் நிலக்கரி தோண்டி எடுப்பதற்கு விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. சுரங்க வட்டாரங்களான வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கை ஏலத்தில் இருந்து விலக்கிட வேண்டும். எதிர்காலத்தில் மாநில அரசு தொடர்புடைய பொது அறிவிப்புகள் வெளியிடுவதற்கு முன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
காவேரி டெல்டாவின் உணவு உற்பத்தி:
தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டாப் பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பாக சமீபத்திய ஏல அறிவிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சனையை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2006. கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆகியவற்றின் கீழ் 17 வது / 7 வது பாகம் மூலத்தை மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் 29 மார்ச் 2023 அன்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
மாநில அரசுடன் ஆலோசனை செய்வது முக்கியம்:
இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு மத்திய தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநில அரசுடன் கலந்தாலோசணையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி. கடலூரி மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும். இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட
வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு 4 (1) இன் படி, "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது" என்று வகுக்கப்ட்டுள்ளது. இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் "நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்" ஆகியவை அடங்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள டென்டர் நிபந்தனைகளில் நிலக்கரி படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020 இன் தடைக்குள் அடங்கும். ஆகவே இந்த எல அறிவிப்பு செயல்முறைப்பட்டு. வெற்றிகரமான ஏலதாரர் அடையாளம் காணப்பட்டாலும், சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது என்பதை இது குறிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட வட்டாரங்களைப் பொருத்தவரை இந்த ஏல நடைமுறை வீணான செயலாகும். அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்திருந்தால், இப்பிரச்னைகளை தெளிவுபடுத்துவதுடன், ஏலத்திற்கான அறிவிக்கை வெளியீட்டால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்கத் வட்டாரங்கள் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், எலத்தின் 7வது/17வது தவணையில் இருந்து விலக்கிட வேண்டும்; பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)