Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
Singappen Special Task Force: சேலம் மாநகரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனத்தை சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி துவக்கி வைத்தார்.

சேலத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைத்து அறிவுரைகள் வழங்கினார்.
தொடங்கிவைத்த சேலம் ஆணையர்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின்படி சிங்கப்பெண் சிறப்பு படை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனத்தை சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி துவக்கி வைத்தார்.

யார் தலைமையில் படை?
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேரடியாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் செயல்பட உள்ளது. இதில் காவல் உதவி ஆணையாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 பெண் தலைமை காவலர்கள் என ஆறு பேர் பணியாற்ற உள்ளனர்.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு தேவையான நான்கு சக்கர வாகனம், தொடர்பு கொள்ளும் சாதனங்கள், காவல்துறை உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பெண் சிறப்புப் படையின் செயல்பாடுகள் என்ன?
- குற்ற சம்பவங்கள் நடைபெறும், நடைபெற வாய்ப்பு உள்ள இடங்களைக் கண்டறிந்து கண்காணித்தல்,
- பொது இடங்களில் தொடர்ந்து சுற்றுக்காவல் மேற்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்குதல்,
- காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் இருப்பை அதிகரித்து குற்ற சம்பவங்களை தடுப்பது,
- பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள்,
- சட்டவிரோத மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது,
- பெறப்படும் மனுக்களுக்கு உடனடி மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது,
- பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நபர்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வது மற்றும் தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வது,
- சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது,
- சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது,
- பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை இலக்காக கொண்டு செயல்படுவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட உள்ளது. இத்திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















