மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் வெகுவாக பாரட்டப்பட்டன. அண்ணாவின் கனவுத் திட்டமான இதனை நிறைவேற்றிவிட வேண்டும் என்று பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்
![Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..? Sethusamudram Shipping Canal Project to be restarted ? Know in Details Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/1bed36de4c5c5aaaa7477409350983ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அண்ணாவும், கலைஞரும்
மூன்றுபுறம் கடல் சூழ்ந்த தீபகற்ப நாடு இந்தியா. இந்தியா 7 ஆயிரத்து 517 கிலோ மீட்டர் நீள கடற்கரையை கொண்டு உள்ளது. இங்கு 12 பெருந்துறைமுகங்கள், 185 சிறிய துறைமுகங்கள் இருக்கின்றன. இதனால் கடல் வாணிபத்தில் இந்தியா பல நூற்றாண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 கிலோ மீட்டர் நீள கடற்கரை அமைந்து உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை இணைக்கும் வழித்தடம் இதுவரை இல்லை. நம் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுகத்துக்கு செல்ல வேண்டுமென்றால் மற்றொரு நாட்டின் கடல் பகுதியை பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. ![Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/b03b78b2346407e94dd804b02118ac27_original.jpg)
![Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/b03b78b2346407e94dd804b02118ac27_original.jpg)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய் நிலை இருக்கிறது. இதனால் சுமார் 254 முதல் 424 கடல் மைல் வரை கூடுதல் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக கூடுதலாக 32 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பெரும் பொருளதார இழப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்திய கடல் பரப்பில் கப்பல் வழித்தடத்தை அமைக்க விரும்பினர். அதுவே ’சேதுக்கால்வாய் திட்டம்’ ஆகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தபோது தொண்டர்களுக்கு எழுதிய மடலில் “சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல்கள் போக வேண்டிய நீளம் குறையும்; இங்கேயுள்ள மீனவர்கள் வாழ்வு செழிக்கும், தமிழ்நாடு எல்லா வளமும் பொருந்திய நாடாக மாறும்” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
![Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/c9024c135246f6acbf67891a698271d2_original.jpg)
இந்த கால்வாயின் மொத்த நீளம் 167 கிலோ மீட்டர் ஆகும். கால்வாயின் ஆழம் 12 மீட்டராகவும், அகலம் 300 மீட்டராகவும் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் 78 கிலோ மீட்டர் தூரம் ஏற்கனவே ஆழமான பகுதியாக உள்ளது. 89 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் தோண்ட வேண்டி உள்ளது.
![Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/c099e5bab2d0a797acc0ca9ca7545e1d_original.jpg)
இப்படி ஒரு கால்வாய் திட்டத்தை 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவமைத்து இருப்பது, வெறும் பொருளாதார நோக்கோடு மட்டும் அல்ல. தொலைநோக்கு பார்வையுடன் நாட்டின் பாதுகாப்பு அம்சத்தையும் உள்ளடக்கிதான். தற்போது தென்பகுதியில் உள்ள கடற்படை கப்பல்கள், கடலோர காவல்படை கப்பல்கள் வட தமிழகத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய நிலைதான். சமீபகாலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை மத்திய அரசு அமைத்தது. இதில் ஆவடி ராணுவ டேங்க் தயாரிப்பு தொழிற்சாலை, கூடங்குளம் அணுமின்நிலையம், தூத்துக்குடி ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை அடங்கும். இதனால் மத்திய அரசு தென் தமிழக கடற்கரையை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடற்படை கப்பல்களையும் தூத்துக்குடி கடல் பகுதியில் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தால், இந்திய போர்க்கப்பல்கள் இலங்கை கடல் பகுதி வழியாக செல்லும் போது, குறுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் கப்பல்கள் நம் பாதுகாப்பு இலக்கை அடைவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
![Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/3b38e7c48e9c15dc14970584ac10182b_original.jpg)
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று பாதுகாப்பதே சரியாக அமையும். அதனை விடுத்து இலங்கையை சுற்றி வருவது சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள சேதுக்கால்வாய் திட்டம் மட்டுமே தீர்வாக அமையும் என்று கருதி உள்ளனர். இதனால் சேதுக்கால்வாய் அமைக்க பல்வேறு கட்டங்களில் குழுக்கள் அமைத்து திட்டம் தீட்டப்பட்டன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க. தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அவர்களின் அனைத்து தேர்தல் அறிக்கைகளே அதற்கு சாட்சியாகவும் உள்ளன. இந்த திட்டத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். ரூ.2 ஆயிரத்து 427 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.867 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டன.
இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ராமேசுவரம், தொண்டி, சேதுபாவாசத்திரம், மசூலிப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களும், குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா துறைமுகங்கள் வளர்ச்சி பெறும். அரபிக்கடலில் இருந்து வங்கக்கடலுக்கு வரும் கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டு வருவதால் ஏற்படும் நேரம், எரிபொருள் செலவு மிச்சமாகும். இதனால் கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் வழியாக பெறப்படும் சரக்குகளின் விலை கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
![Sethusamudram Project: ’சேது சமுத்திரம் என்னும் தமிழனின் கனவு திட்டம்’ இனியாவது நனவாகுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/263e847023e76268ebd7ca7cbb1a817c_original.jpg)
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். ரோந்து பணிகள் அதிகரிப்பதால் கடத்தலை தடுக்க முடியும். பொருளாதார வளர்ச்சி பெருக்கம் ஏற்படும். அதே போன்று நம் கடல் பரப்பிலேயே போர்கப்பல்கள் ரோந்து சென்று பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும். இதனால் சேதுக்கால்வாய் அத்தியாவசிய தேவையாகி உள்ளது. 150 ஆண்டுகளாக நிறைவேறாத தமிழனின் கனவு கால்வாய் திட்டம் இன்னும் கனவாகவே உள்ளது. கனவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு இருப்பதாகவே கருதப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சத்தில் உள்ளனர். மீனவர்களிடம் இது குறித்து விளக்கம் அளித்து மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் நிலைபாடாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion