Senthil Balaji: 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' .. இப்ப வாங்குறது நின்னுடுச்சா?.. விஜய்க்கு செந்தில்பாலாஜி கேள்வி!
ஒரு தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் முன்பு எதை செய்ய முடியும் என்பதைப் பார்த்து கொடுக்க வேண்டும். இது ரீல்ஸ் ஆட்சி. இன்னமும் அமைச்சர்கள் அந்த மோகத்தில் தான் இருக்கிறார்கள் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக வசூலிப்பது தவெக ஆட்சிக்கு வந்ததும் நின்று விட்டதா? - என முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசை சரமாரியாக விமர்சித்தார்.ஊடகவியலாளர்கள் சந்திப்பில், “அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கோவைக்கு வந்தபோது, திமுக ஆட்சியில் அதிகமாக போதைப்பொருள் புழக்கம் இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என சொன்னாரே.. அது பற்றி உங்கள் கருத்து என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி , “எந்தெந்த மாநிலங்கள் வழியாக போதைப் பொருட்கள் இந்தியாவுக்குள் வருகிறது, அங்கிருந்து எப்படி தமிழ்நாட்டிற்குள் வருகிறது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பலமுறை தமிழக சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். இந்த தவெக அரசு பொறுப்பேற்று ஒரு மாதமாகி விட்டது. அதுதொடர்பாக என்ன முயற்சி எடுத்துள்ளார்கள் என்பதை சொல்ல வேண்டும். இந்த ஒரு மாத காலத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்ல வேண்டும்.
திருச்சியில் பேசிய விஜய், ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றி விட முடியாது என சொல்கிறார். அதாவது எவ்வளவு மட்டமாக, கீழ்த்தரமாக பேச வேண்டுமோ அதையெல்லாம் விஜய் செய்தார். கரூருக்கு வந்து பேசுறதை விட்டு விட்டு பாட்டு பாடினார். சட்டமன்றத்தில் சொன்ன விளக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ளாதவர்கள் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் கண்கூடாக பார்க்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் நடப்பதைப் பார்க்கிறார்கள்.
டாஸ்மாக் நிர்வாகம் பற்றி பேசுகிறார்கள். இப்ப அதில் என்ன கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்?.. நாங்க யார் மேல் நடவடிக்கை எடுத்தோம். அபராதம் வசூலித்தோம் என அத்தனையையும் தெரிவித்தோம். வெறும் வாக்குகளை வாங்க திமுக அரசுக்கு எதிராக அவதூறுகளை பரப்பினார்கள். வாகனம் மேல் ஏறி பாட்டிலுக்கு பத்து ரூபான்னு பாடுனாங்களே.. இப்ப டாஸ்மாக்கில் ரூ.10 வாங்குவது நின்று விட்டதா?.. அந்த துறை அமைச்சர் விளக்கம் தான் கொடுக்கிறார்.
Also Read: திருச்செந்தூரில் நிம்மதியான தரிசனம்.. அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த மாற்றம்.. வீடியோ வெளியீடு!
ஒரு தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் முன்பு எதை செய்ய முடியும் என்பதைப் பார்த்து கொடுக்க வேண்டும். இது ரீல்ஸ் ஆட்சி. இன்னமும் அமைச்சர்கள் அந்த மோகத்தில் தான் இருக்கிறார்கள். இன்னும் ரியலாக பணிகளை தொடங்கவில்லை. இனியும் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















