மேலும் அறிய

Republic Day Tableau: குடியரசு தின அணிவகுப்பும், திராவிட அரசியலும்!

சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை மத்திய அரசின் தேர்வுக்குழு நிராகரித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது

இந்திய குடியரசு தின அலங்கார அணிவகுப்பில், தமிழகத்தின்  சார்பாகச்  சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை மத்திய அரசின் தேர்வுக் குழு நிராகரித்துள்ளது பேசும் பொருளாகி உள்ளது.

கூட்டாட்சித் தத்துவ ரீதியாக பதில் அளிக்கும் முயற்சியாக, மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாடத்த்தில், இதே அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்றும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்திகள் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி என்ற அளவில் இது பாராட்டத்தக்க முடிவாக இருந்தாலும், திராவிட இயக்கத்தினரின் தனித்துவ சிந்தனைப் புரட்சியையும், சமூக- ஜனநாயகத் தன்மையையும் இது கேள்வி கேட்பதாய் அமைந்துள்ளது. 

தேசிய தலைநகர் போலல்லாமல், மிகச் சிக்கனமான செலவினங்களுடன் மாநிலங்களில் குடியரசுத்தின விழா நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆளுநர் தேசியக்கொடியை ஏற்றுவார். வீரதீர செயல்கள் செய்த பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அண்ணா பதக்க விருதுகளை முதலமைச்சர் வழங்குவார். மேலும், மாவட்ட அளவில்  சிறப்பாகச் செயல்பட்ட அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்கள், காவல்துறை அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்படும். அதிகபட்சமாக, சமாதான புறாக்களை பறக்கவிடுவதும், தேசிய கோடி வண்ணத்திலான பலூன்களைப் பறக்க விடுவதும் தான் குடியரசு  தினத்தைப் பற்றிய கற்பனையாக இருந்தது.   


Republic Day Tableau: குடியரசு தின அணிவகுப்பும், திராவிட அரசியலும்! 

மேலும், அன்றையத் தினத்தன்று நடத்தப்படும் சிறப்பு கிராம சபை பொதுக் கூட்டம் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை களைவதாக இருந்தன. சுருங்கச் சொன்னால், தேசிய தலைநகர் டெல்லியைப் போலல்லாமல், மாநில அளவில், அரசும், மக்களும் இணைந்து உருவாக்கிய ஒரு பொதுக் தளமாகவும்(Public Sphere), அரசுக்கும் சமுதாயத்துக்குமிடையே பரஸ்பரத் தொடர்பை குடியரசுத் தனம் ஏற்படுத்தி வந்தன. மொழிப் பற்று, இனப் பற்று, தேசப்பற்று, வரலாற்றுவாதம் என்ற பெருஞ்சொல்லாடலுக்குள் அது சிக்கவில்லை. 

அலங்கார அணிவகுப்பும் - பெருஞ்சொல்லாடல்களும்:   

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் 'அரசு' என்பது முதன்மைப் பொருளாக உள்ளது.  சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், சமூக வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் அரசின் தலையீடு இருந்தது. ஜவஹர்லால் நேருவின் சோசியலிச பொருளாதாரக் கொள்கை  விவசாய உற்பத்தி, வர்க்க சுரண்டல், தொழிற்சாலைகள் முதலீடு, பிராந்திய வளர்ச்சி, பழங்குடியினர் நல்வாழ்வு, நவீன கல்வி, அணு ஆற்றல் போன்றவற்றில் அரசின் தலையீட்டை உறுதி செய்தது. மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் போன்ற  பொதுக் கருத்தை உருவாக்கியதில் இந்திய அரசுக்கு முக்கிய பங்குண்டு. சுருங்க சொன்னால், நேருவின் அரசு எங்கும், எல்லா இடங்களிலும் பரவி இருந்தது.

குடியரசு நாள் கொண்டாட்டங்களும் தேசிய உருவாக்கம் என்ற பெருஞ்சொல்லாடல்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. கொண்டாட்டங்களை வரையறுப்பதில் அரசு நிர்வாகிகள் (administrations), வல்லுநர்கள் (Experts) ஆகியோரின் பங்கு முக்கியத்துவம் பெற்றது. 


Republic Day Tableau: குடியரசு தின அணிவகுப்பும், திராவிட அரசியலும்!

ராஜபாதையில், குடியரசுத் தலைவர் கொடியேற்றும் போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்படும். இதையடுத்து அணி வகுப்பு தொடங்கும். முதலில், ராணுவத்தின் வலிமையைப் பறைசாற்றும் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வரலாறு, கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார அணிவகுப்புகள்  நடைபெறும்.

இங்கே, இரண்டு குறியீடுகளை ஒருவர் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, அசாம், நாகாலாந்து, ஜம்மு&காஷ்மீர் போன்ற பலதரப்பட்ட பிராந்திய கலாச்சாரங்களை காப்பாற்றி வலுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு. இரண்டாவதாக, அதே ஜம்மு- காஷ்மீரில், நாகாலந்தில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக இந்தியா ராணுவத்தின் பங்கு இன்றியமையாதது என்பதையும் எடுத்துரைக்கிறது (1. ஸ்ரீரூபா ராய்)  


Republic Day Tableau: குடியரசு தின அணிவகுப்பும், திராவிட அரசியலும்!

 

திராவிடமும் - வட்டார விவாதமும்:   

தேசிய அரசியல் மிகப்பெரிய கருத்தாக்கத்தை உருவாக்க நினைக்கிறது. குடியரசு தினம், சுதந்திரத் தினம், அரசியலமைப்புத் தினம், தேசிய ஒற்றுமை நாள் போன்ற கொண்டாட்டங்களின் வழியே பொது அபிப்பிராயத்தை  விதைக்கிறது. இந்த, கொண்டாட்டங்களில் வெகுஜன மக்களுக்கு  வெறும் பார்வையாளர் என்ற அந்தஸ்து மட்டுமே கிடைக்கிறது. அரசுக்கும், சமூகத்துக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்புகள் மேலிருந்து-கீழாக செல்கின்றன.  மேல்தட்டு சமூக மதிப்புகளை கீழ்தட்டு மக்களுக்கு கடத்தும் ஒரு சம்பிரதாயமாகவே இருந்து வருகின்றன. புதிய அணுகுமுறைகளோ, வழிமுறைகளோ முற்றிலும் இல்லை.    

 

Republic Day Tableau: குடியரசு தின அணிவகுப்பும், திராவிட அரசியலும்!
2020 குடியரசுத் தினம்- அய்யனார் சிலைக்கு பூணூல் போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது

 

20ம் நூற்றாண்டில் உதயமான திராவிட இயக்கம், பெரிய பெரிய  கருத்தாக்கங்களை விட சராசரி உள்ளூர்மட்ட மக்களின் கலாச்சார அரசியலை முன்வைக்கிறது. இந்துமதம், இந்திய தேசியம் என்ற சொல்லாடல்களை முற்றிலும் தவிர்த்தது. இந்திய/ தமிழக பழம்பெரும் வாதத்தை மறுத்தலில் தான் பெரியாரின் அரசியல் உள்ளது. தமிழகத்தின் மாமன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள், அல்லிராணி, கண்ணகி, மாதவி என யாரையும் அவர் விமசரிக்கத் தயங்கவில்லை (2. எம்.எஸ்.எஸ் பாண்டியன்). சுருங்கச் சொன்னால், இதுதான் ஒற்றை வாழ்க்கைமுறை, இப்படித்தான் வாழ வேண்டும், இதோ அந்த கோட்பாடு என்ற நிலைப்பாட்டை திராவிட இயக்கத்தினர் அறிவுறுத்தியதாக இதுவரை தெரியவில்லை.   

மேடைப்பேச்சு, பத்திரிக்கை, திரைப்படம், தேநீர்க் கடை பெஞ்சு, திண்ணைப் பிரச்சாரம், பொதுச் சந்தை போன்றவை மூலம் தமிழகத்தில் 'அரசு' பற்றிய கற்பனை பிறந்தது (3. சுந்தர் காளி). அதாவது, திராவிட இயக்கத்தின் உந்துதலால் தமிழகத்தில்  பொதுத்தளம் (Public Sphere) தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இந்த களம் சுய சிந்தனையும், விமர்சனத்தையும் ஊக்கப்படுத்தியது. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறது, வினவுகிறது, ஊக்கப்படுத்துகிறது.  

அதன் காரணமாக, தமிழகச் சூழலில், கூலி விவசாயப் பெருங்குடிகள், மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பூர்வ பழங்குடிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பால் புதுமையினர் தங்களது சொந்த விவாதங்கள் மூலமும், சமூகத் தேடல்கள் மூலம் தான் சமூக நீதியைப் புரிந்து கொள்கின்றனர். கடவுள் எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, நாத்திகீ சொல்லாடல்கள், பகுத்தறிவு சிந்தனைகள் எல்லாம் சமூக மட்டத்தில் உருவானது. சமூக மதிப்புகள் கீழிருந்து- மேலே செல்கின்றன. நாட்டுப் பற்று என்றால் என்ன? விடுதலை  வேட்கை என்றால் என்ன? விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு என்ன? போன்ற விவாதங்கள் வட்டார அளவில் அந்தந்த சமூகக் குழுக்களுக்கு இடையே நடைபெற்று வருகின்றன.   

Republic Day Tableau: குடியரசு தின அணிவகுப்பும், திராவிட அரசியலும்!

அரசின் கையில் கலாச்சாரம்: இந்தியாவில், 90-களில் பின்பற்றப்பட்ட தாராளமயம் - உலகமயம்-தனியார்மயம் ஆகியவை, அரசைப் பற்றிய அடிப்படை சாரம்சத்தை மாற்றின. பொதுத்துறைகள் ஓரங்கட்டப்பட்டு தனியார் துறையும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை எடுக்கத் தொடங்கின. “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை” (Minimum Government, Maximum Governance) என்னும் கொள்கையை தற்போதைய அரசு பின்பற்றுகிறது. மறுபுறம், இந்து, இந்தி என்ற ஒற்றை மையத்தினுள் பலதரப்பட்ட சமூகக் குழுக்கள் அடையாளங்கள் சிக்கக் வைக்கப்பட்டு வருகின்றன.  

முரண்பாட்டை விலக்குதல், தவிர்த்தல், மறுத்தல், பொதுமைப்படுத்துதல்(Totalising) ஆகியவற்றையே இக்கால அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பன்மீய சமூகக் குளுக்களுடையே பரஸ்பரத் தொடர்புகளை இக்கால அரசு நிராகரித்தன் வெளிப்பாடாகத் தான் கடந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு வன்முறையில் முடிந்தது. வேளாண் சட்டகங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் பொருளாதார நோக்கங்களைத் தாண்டி, பொதுமைப்படுத்துதல் எனும் கருத்தியலுக்கு எதிரான போராட்டமாக இருந்து வந்தது.      

Republic Day Tableau: குடியரசு தின அணிவகுப்பும், திராவிட அரசியலும்!

தமிழகத்திலும், அதற்கான தொடக்கமாகக் குடியரசு தின அணிவகுப்பு மாறாமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று, தமிழர், திராவிடர் என்ற ஒற்றை மொழியில் தொடங்கப்படும் அணிவகுப்பு சம்பிரதாயம், நாளை சாதி அரசியலை பட்டியலிட்டு காட்டாது என்று நம்மால் அறுதியிட்டு கூற முடியுமா?    

ஏற்கனவே, வாக்குவங்கி அரசியலை  மனதில் வைத்துக் கொண்டு மாவட்டங்களுக்கும், பேருந்து நிலையத்துக்கும் சாதிப் பெர்யர்கள் சூட்டப்பட்டன. 97-ல் விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்துக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வீரர் சுந்தரலிங்கனார் பெயர் மாற்றம் செய்த போது, மிகப்பெரும் சாதி கலவரம் தென் மாவட்டங்களில் உருவானது. இது, சமூக நீதிக்கான புரட்சிகரமான முடிவு என்று அரசு மார்தட்டிக் கொண்டாலும், இறுதியில் தலித்களின் உடம்பின் மீதுதான் வன்முறை பாய்ந்தது. மறுபுறம், 1979 முதல் தேவர் குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமீபத்தில்,    1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கும் வகையில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பும் மோசமான அணுகுமுறை என்று தலித் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிகழ்வின் போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் குடிசைகள் கொளுத்தப்பட்டதும் , 36 கிராமங்கள் சூறையாடப்பட்டதும் இயல்பாக கடக்கக் கூடிய நிகழ்வா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். 

அரசு முன்னின்று நடத்தும் கலாச்சார அரசியலில்  (குடியரசுத் தின வகுப்பு, மணிமண்டபம்) பல்வேறு உலகங்கள சங்கமிப்பதில்லை. பல்வேறு சமூகக் குழுக்களின் கருத்தாடல் களமாகவும் அது இருப்பதில்லை. தோற்கடிக்கப்பட்ட அறிவுகள்,  மாற்றுப் பார்வைகள் புறக்கணிக்கும் இடமாக மட்டுமே அது செயல்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக, குடியரசு தின அணிவகுப்புகள் கலச்சார பொருட்கள் காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மிகவும் நுட்பமான முறையில், முரண்பாடுகளை வெளியே தள்ளிவிடும்.  

எனவே தமிழர், திராவிடர், மாநில சுயாட்சி, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருஞ்சொல்லாடலைகளைத் தவிர்த்தது  மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் தங்களுக்கான அடையாளங்களை உருவாக்கி கொள்ளும் வாய்ப்பாக குடியரசு தினம் இருக்கட்டும். தங்களுக்கான குடியரசையும், ஜனநாயக மரபுகளையும், பன்மை அடையாளத்தையும் தாங்களாகவே மீட்டுக் கொள்ளட்டும். ஊர் - காலணி குடியிருப்பு, தீண்டாமை, தலித் சமூகத்தினருக்கும் தனி சுடுகாடு போன்ற தனது உள்ளார்ந்த காயங்களையும், இயலாமைகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தும்.              

கட்டுரைக்கு உதவியவை: 

1. Seeing a State: National Commemorations and the Public Sphere in India and Turkey SRIRUPA ROY

2. எம். எஸ். எஸ் பாண்டியன் -  தேசிய பழமைவாதத்தை மறுத்தல் - பெரியாரின் அரசியல் கருத்தாடலில் தேசம் 

3. The Making of a New publis Sphere: Sundar kaali 

4. எஸ்.வி ராஜதுரை - ப்ராங்க்பர்ட் மார்க்சீயம் ( 11ம் பகுதி - யொர்ர்கன் ஹேபர்மாஸ்) 

5.  மணிமண்டபங்களிலிருந்து உயிர் பெற்றெழும் சாதி - வாசுகி பாஸ்கர்  

மேலும், வாசிக்க: 

1. Democracy or capitalism? JÜRGEN HABERMAS (India Seminar)

2. 2021 Farmers' Republic Day protest (Wikipedia) 

3.The Indian Public Sphere: Readings in Media History 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget