![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Rain Red Alert Today: வட தமிழக கடலோர பகுதிக்கு 'ரெட் அலர்ட்'
வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
![Rain Red Alert Today: வட தமிழக கடலோர பகுதிக்கு 'ரெட் அலர்ட்' Red Alert for North Tamil Nadu Coastal Area Chennai Chengalpattu Kanchipuram Thiruvallur to Receive Heavy Rain Today- IMD Rain Red Alert Today: வட தமிழக கடலோர பகுதிக்கு 'ரெட் அலர்ட்'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/31d371cbe43e9ea82903d26c14e843171668140203520588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலை. பதிவாளர் அறிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் 20 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னழுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதால் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகன மழை எதிரொலியால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, உள்ளிட்ட 23 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
TN Rain News LIVE: வட தமிழக கடலோரப் பகுதிக்கு "ரெட் அலர்ட்"
திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவி வந்தது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன - மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்' என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)