பக்தர்களுக்கு இனி பிரச்னை இல்ல.. அத்திப்பட்டு, கும்மிடிப்பூண்டி இடையே புதிய ரயில் பாதைகள்
இந்த திட்டத்தின் மூலம் பெரியபாளையம் தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு அம்பிகை, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில் செல்லும் பக்தர்கள் பயன் அடைய உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே 22.52 கி.மீ நீளமுள்ள மூன்று மற்றும் நான்காவது ரயில் பாதைகள் ரூ.374.3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன. இது, சென்னை - கூடூர் வடகிழக்கு ரயில்வே பாதையில் உள்ள மிக முக்கியமான பகுதி ஆகும். இதனை, இரண்டாண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மொத்த ரயில்வே வழித்தடத்தின் நீளம்: 47 கிமீ
பாலங்கள்: 6 பெரிய பாலங்கள் மற்றும் 48 சிறிய பாலங்கள்
மின் பாதை அமைப்பு: 2x25 கிலோவோல்ட்
வேகம்: மணிக்கு 160 கிமீ
ரயில் நிலையங்கள்: அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி
அத்திப்பட்டு, கும்மிடிப்பூண்டி இடையே புதிய ரயில் பாதைகள்:
இந்தத் திட்டத்தின் மூலம் வழித்தட திறன் பயன்பாடு தற்போது உள்ள 99.1% இலிருந்து 63.7% ஆகக் குறையவுள்ளது. இதனால் எஃகு, உணவுதானியம், பெட்ரோரசாயனங்கள், உரம், சிமென்ட் மற்றும் வாகனங்கள் போன்ற முக்கிய பொருட்களின் வேகமான மற்றும் சீரான போக்குவரத்து சாத்தியமாகும்.
மேலும், சென்னை துறைமுகம், காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை இணைக்கும் இந்த திட்டம், காமராஜர் துறைமுகத்தில் உள்ள இந்தியப் பெட்டகக் கழக சரக்கு முனையத்திற்கும் சேவையளிக்கும்.
பக்தர்களுக்கு இனி பிரச்னை இல்ல!
சுற்றுலாவுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய பழவேற்காடு ஏரி, பூண்டி ஏரி, ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயசுவாமி கோவில், திருவள்ளூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில், திருவொற்றியூர் பவானி அம்மன் கோவில், பெரியபாளையம் தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு அம்பிகை, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில் முதலியவை பெரும் ஊக்கம் அடையும்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், முதலாண்டில் கூடுதலாக வருடத்திற்கு 8.71 மில்லியன் சரக்குகள் கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல 6-வது ஆண்டில் வருடத்திற்கு 11.11 மில்லியன் டன்னும், 11-வது ஆண்டில் வருடத்திற்கு 14.18 மில்லியன் டன் சரக்குகளும் கூடுதலாகக் கையாளப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக அமையும்.





















