10th முடிச்சிருக்கீங்களா? லைனில் நிற்க வேண்டாம்... போன் இருந்தா போதும்! புதுச்சேரி அரசின் சூப்பர் வசதி!
புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் வசதிக்காக, மொபைல் ஆப் மூலம் மதிப்பெண் சான்றிதழைப் பதிவேற்றி வேலைவாய்ப்பு பதிவு செய்யும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2025–26-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் வசதிக்காக, மொபைல் ஆப் மூலம் மதிப்பெண் சான்றிதழைப் பதிவேற்றி வேலைவாய்ப்பு பதிவு செய்யும் புதிய சேவையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை செயலர் ஸ்மித்தா வெளியிட்டுள்ள முக்கிய செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய தகவல் மையம் ஒத்துழைப்பு
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இருந்து பெறப்பட்ட 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மொபைல் ஆப்பில் பதிவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தின் (NIC) ஒத்துழைப்புடன் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய சேவையின் மூலம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த மாநில பாடத்திட்டம் (State Board) மற்றும் சி.பி.எஸ்.இ. (CBSE) பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் பெரிதும் பயனடைவார்கள்.
நேரில் செல்ல வேண்டியதில்லை
மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்ற பிறகு, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் மொபைல் போனில் உள்ள ஆப் (Mobile App) மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவை மிக எளிதாக மேற்கொள்ளலாம்.
மேலும், கல்வித் தகுதியைப் பதிவு செய்யும் வழிமுறைகள் மற்றும் அதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விரிவாக வெளியிடப்படும்.
மூப்புரிமை பாதிக்கப்படாது
மாணவர்கள் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யும் நாளே அவர்களின் வேலைவாய்ப்பு மூப்பு (Seniority) தேதியாகக் கணக்கிடப்படும். எனவே, அவர்களின் வேலைவாய்ப்பு மூப்புரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அத்துடன், இந்த மொபைல் ஆப் மூலமாகவே கல்வித் தகுதியைப் பதிவு செய்து முடித்தவுடன், தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண் மற்றும் அடையாள அட்டையை உடனுக்குடன் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பயன்படுத்துவது எப்படி?
மாணவர்கள் தங்களது பிராந்தியம், 10-ம் வகுப்பு தேர்வு பதிவு எண் (Roll No) மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அடிப்படை விவரங்களைப் பதிவு செய்து இந்த சேவையை மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, 10-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் இந்த நவீன வசதியைப் பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















