விஜய் ஆட்சியில் முருகனுக்கே மொட்டை! பழனி கோயில் நிலம் ரூ.110 கோடி சுருட்டல் - மொட்டையடித்து ராமரவிக்குமார் ஆவேசம்
"மாற்றம் தருகிறோம் என்று கூறி 60 நாட்களுக்குள் பதவியேற்ற விஜய் அரசு, தற்பொழுது பழனி முருகனுக்கே மொட்டை போட்டுள்ளது" என ராமரவிக்குமார் எனக் குற்றச்சாட்டு.

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 110 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "மாற்றம் தருகிறோம் என்று கூறி 60 நாட்களுக்குள் பதவியேற்ற விஜய் அரசு, தற்பொழுது பழனி முருகனுக்கே மொட்டை போட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டிய அவர், அதன் தொடர்ச்சியாகப் பழனி சரவண பொய்கைக்குச் சென்று, தனது தலையை அதிரடியாக மொட்டையடித்துக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் கோயில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு, பக்தர்களின் இலவச வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சொத்தைப் பதியக் கூடாது என்று கோயில் நிர்வாகம் மூன்று முறை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, கடந்த ஜூலை 6-ஆம் தேதி சிறப்புப் பணிக்காக வந்த இணைப் பதிவாளர் இந்த நிலத்தைத் தனிநபர்கள் இருவருக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்குப் பதிவு செய்துகொடுத்துள்ளார்.
சொத்தை ஆட்டைய போட்ட தவெக அரசு
ரூ. 110 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, முழித்துக் கொண்டிருக்கும்போதே முழியைத் தோண்டுவது போல ஆட்டையப் போட்டுள்ளனர். ஊழலற்ற ஆட்சி என்று பேசும் முதலமைச்சர் விஜய், உங்கள் டிபார்ட்மெண்ட்தான் இந்த இமாலயச் சொத்தைப் பதிந்துள்ளது. பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உடனடியாகப் பழனிக்கு வர வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளைச் சஸ்பெண்ட் செய்வது வேலையல்ல, கிரிமினல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேண்டும். தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

மேலும், கரூரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கோயில் இனாம் நிலங்களை, ஓட்டு நாடக அரசியலுக்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா போட்டுக் கொடுக்கத் துடிக்கும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.
மொட்டை போட்டு நூதனப் போராட்டம்
செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததைத் தொடர்ந்து, "பழனியில் கோயில் சொத்துக்கள் தொடர்ந்து மொட்டையடிக்கப்பட்டு வருகின்றன" எனக் கூறித் தனது கண்டனத்தை வெளிப்படுத்தப் பழனி சரவண பொய்கை பகுதிக்கு ராமரவிக்குமார் சென்றார். அங்குத் திரண்டிருந்த தனது கட்சியினர் முன்னிலையில், இந்தச் சட்டவிரோதப் பத்திரப்பதிவை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், முறைகேடான சார்பதிவாளரைச் சிறையிலடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தித் தானும் மொட்டையடித்துக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















