![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cinematograph Act Amendment Bill: எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும் - சீமான் ஆதரவு
சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
![Cinematograph Act Amendment Bill: எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும் - சீமான் ஆதரவு NTK Seeman warns BJP for threatening actor suriya for commenting on cinematograph act amendment bill Cinematograph Act Amendment Bill: எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும் - சீமான் ஆதரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/4879b33dd26aaafd911cb01473f73e6f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்பட பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்து வருகிறது. இந்த நிலையில், `சினிமாடோகிராப் ஆக்ட் 2021’ என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த சட்டத்திற்கு திரைத்துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகர் சூர்யாவும், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சூர்யாவுக்கு ஆதராக கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல...#cinematographact2021#FreedomOfExpression
— Suriya Sivakumar (@Suriya_offl) July 2, 2021
Today's the last day, go ahead and file your objections!!https://t.co/DkSripAN0d
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் இந்தியா அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், இந்நாடு கொண்டிருக்கும் பன்மைத்துவப் பண்பிற்கு முரணாகவும் ஒற்றைமயமாக்கலையும், அதிகாரக்குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச்சட்டமான ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த அன்புத்தம்பி சூர்யா அவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்!https://t.co/YsGJCQpk6s pic.twitter.com/OZRim4rulc
— சீமான் (@SeemanOfficial) July 8, 2021
திரைக்கலைஞர்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தான். அவர்களும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனும் தார்மீகப் பொறுப்புணர்ந்து அநீதிக்கெதிரான தனது அறச்சீற்றத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும் போற்றுதற்குரியது; கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிக்கிறேன்.
அறிவியலுக்கும். அறிவுக்கும் அப்பாலான கற்பனை உலகத்தில் வாழ்ந்து, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, அடக்குமுறையை ஏவுவதும், தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், ஆபாசமாகப் பேசுவதும், சமூக விரோதி, தேசத்துரோகியென முத்திரை குத்தி ஒடுக்குவதுமென சனநாயக விரோதங்களை அரங்கேற்றி வரும் பாஜக, தம்பி சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது.
தம்பி சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர் பெருமக்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன்; பாஜகவின் ஆட்சிமுறை குறித்தும், அவர்கள் முன்வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டு வருகிற சட்டங்கள் குறித்தும், பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்தும் வாதிட தர்க்கரீதியிலான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன். என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா? எங்களை எதிர்கொள்ளத் துளியளவாவது துணிவிருக்கிறதா? எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்.
தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப் பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)