Nithyananda Alive: “ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
நித்யானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அதிகாலை நேரலையில் தோன்றிய அவர், தான் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா மரணமடைந்துவிட்டதாக 4 நாட்களாக தீயாய் பரவிய தகவல்களை பொய்யாக்கும் விதமாக, இன்று அதிகாலை அவரது யூட்யூப் சேனலில் நேரலையில் தோன்றி, புரளிகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உலக அளவில் பிரபலமாக வலம்வந்த நித்யானந்தா
திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட நித்யானந்தாவிற்கு, உலக அளவில் பெருமளவில் ரசிகர்களும், சீடர்களும் உள்ளனர். பெரும் பிரபலமாக இருந்த நித்தியானந்தா, பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் சீடர்களைத் தவறாக வழி நடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெங்களூருவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டே நித்தியானந்தா தலைமறைவானார். 2020-ம் ஆண்டு, திடீரென வீடியோவில் தோன்றிய அவர், கைலாசா என்னும் இந்து நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். மேலும், தன் நாட்டிற்கு என தனி கொடி, பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றை உருவாக்கி நித்தியானந்தா வெளியிட்டார். இது மட்டுமன்றி, கைலாசா நாட்டிற்கு புதியவர்கள் வரலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
நித்யானந்தா குறித்து பரவிய தகவல்கள்
இதைத் தொடர்ந்து, கைலாசா எங்கு இருக்கிறது என பலரும் தீவிரமாக தேட ஆரம்பித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. ஆனால், வடக்கு பசிபிக் தீவுகளில் கைலாசா இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு இருந்துகொண்டு, யூடியூப் நேரலையில் தோன்றி, அவரது பக்தர்களுக்கு உரை நிகழ்த்துவார். இந்த நிலையில், நித்தியானந்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அவரும் தனது தினசரி ஆன்லைன் பிரசங்கத்தைக் குறைத்துக் கொண்டார். இதற்கிடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளிகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், அதில் உண்மையில்லை என்று நித்தியானந்தாவே வீடியோவில் தோன்றிப் பேசினார். ஆனாலும் அவர் தனது பழைய உற்சாகத்துடன் பேசவில்லை, களைப்பாக உள்ளார், உடல்நலக் குறைவுடன் இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.
"உயிர்த் தியாகம்" செய்தார் என வந்த அறிவிப்பு
இந்த நிலையில், நித்தியானந்தா மரணம் அடைந்ததாக, அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீடியோவில் பேசி இருந்தார். இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்ததாகவும் அவர் கூறி இருந்தார். இந்தத் தகவல் வைரலாகப் பரவிய நிலையில், நித்தியானந்தாவுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது யாருக்கு செல்லும் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நித்யானந்தா உயிருடன் இருப்பதாகவும், அவர் நேரலையில் தோன்றுவார் என்றும் கைலாசா தரப்பில் கூறப்பட்டது.
“ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறேன்“ - நேரலையில் வந்த நித்யானந்தா
நித்யானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் தீயாய் பரவிய நிலையில், இன்று(03.04.25) அதிகாலை நேரலையில் தோன்றி, புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நித்யானந்தா. கைலாசா யூட்யூப் பக்கத்தில் நேரலையில் தோன்றி பேசிய அவர், பரம்பொருளின் அருளால் தான் நலமாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், ஆனந்தமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், நல்லபடியாக கைலாசாவின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை செய்துகெண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக, கைலாசம் சம்பந்தப்பட்ட முக்கிய திருப்பணிகள் காரணமாக, பொதுவெளியில் கொடுக்கும் சத்சங்கங்களை கொடுக்க முடியவில்லை என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும், சத்சங்கத்தை நிறுத்தவில்லை என்றும், உகாதி அன்று கூட நேரலையில் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகத்தின் முதல் ஆன்மீக ஏஐ மாடலை உருவாக்கும் பணிகளில் பிஸியாக இருப்பதாலேயே, அடிக்கடி நேரலையில் வர முடியவில்லை என்றும் நிதியானந்தா விளக்கமளித்துள்ளார்.

