TN Weather Update: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
TN Weather Update: வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.

வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.
இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், அது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள், அதாவது 24-ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மேலும், இதன் காரணமாக, இன்று(22-11-25) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்.?
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26° செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன.?
வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலு, இன்றும், நாளையும், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், அந்தமான் கடல் பகுதிகள், ஏனைய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






















