ஆட்சியில் பங்கு கேட்டு உயிரை வாங்குறாங்க.. காங்கிரஸை விமர்சித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என அமைச்சர் ராஜ கண்ணப்பன் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அஇஅதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் அளவுக்கு இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இப்படியான நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், “திமுக என்பது கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் அண்ணா ஆரம்பித்த இயக்கம். மிட்டா மிராசுதாரர்கள் தொடங்கி தொழிலதிபர்கள் வரை அனைவரையும் எதிர்த்து தான் இந்த கட்சியை அவர் தொடங்கினார். சிறு துளி பெரு வெள்ளம் என்பது மாதிரி வளர்ந்து வரும் இயக்கமாக திமுக உள்ளது. அனைவரும் திமுகவை எதிர்த்தவர்கள் இல்லை. 1967ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது. இப்போது அவர்களால் வர முடியுதா?. நான் அவர்களைப் பற்றி சொன்னால் கூட்டணி இருப்பதால் ஏதாவது கோபித்துக் கொள்வார்கள். காங்கிரஸில் ஒருவர், இருவர் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள். காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டாம் என நான் சொல்லவில்லை. அது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம்.
சென்னையில் நானும், செல்வபெருந்தகையும் ஒரு திருமணத்தில் பங்கேற்றோம். கூட்டணியில் இருப்பதால் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டியுள்ளது. திமுகவை வெல்வதற்கு இனி ஒருவன் பிறந்து வர வேண்டும். சாதி என்பது தேர்தலில் வெற்றி பெறாது. எத்தனை தவெக வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது. திராவிடனாக இருந்தால் மட்டுமே நாம் எல்லாரையும் எதிர்க்க முடியும். நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக செல்ல தான் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை. சமீபத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.
பாஜக இங்கு எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. அந்த கட்சியில் இருப்பது எல்லாரும் குற்றம் செய்தவர்கள். சீட்டுக்காக அதிமுக நடத்தப்படுகிறது. எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது. கருணாநிதி ஒரு தேர்தலில் 100 இடங்களில் தான் ஜெயித்தார். அப்போது கூட கூட்டணி ஆட்சி கிடையாது. 150 இடங்களுக்கு மேல் திமுக தான் ஜெயிக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் தனித்து ஆட்சியமைப்பார். அமைச்சர்கள் கூட்டணி கட்சிக்காரர்கள் அழைத்தால் உடனடியாக செல்கிறோம். யாரையும் நாங்கள் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. எங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறோம்” என தெரிவித்துள்ளார்.























