Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Ponmudi speech : இந்திய படித்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் கட்டாயமாக திணிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம் - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் இந்திய எதிர்ப்பு, தொகுதி மறு வரையறை மற்றும் கல்விக்கு நிதி புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
முதலில் உரையாற்றிய உயிர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்:
நாளை சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மத்தியில் உள்ள பாஜக, திமுக அரசை சீண்டி பார்க்கிறது. திமுக என்கிற எஃகு கோட்டையை தொட்டு பார்க்கலாம் என நினைத்தால் மோதி மண்டை உடைதுமே தவிர திமுகவுக்கு எந்த சேதாரமும் வராது. எத்தனையோ ஒன்றிய அரசை பார்த்த கட்சி திமுக. மிசா நெருக்கடியை தாண்டி மீண்டும் ஒரு மாநில கட்சி இருக்கிறது என்றால் அது திமுக மட்டும் தான். திமுகவை சீண்டி பார்த்தவர்கள் தான் சின்னாபின்னமாகியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க:TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
நாற்பது நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றோம். இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, தமிழ் வாழ்க என சொல்வது டெல்லியில் உள்ளவர்களை கதிகலங்க செய்கிறது. அதனால்தான் திமுகவின் ஆட்சிக்கு, தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு இடர்பாடு செய்கிறார்கள். செத்துப்போன சமஸ்கிருதத்துக்கு கொடுக்கும் அக்கறை, செம்மொழியான தமிழ் மொழிக்கு கொடுக்கவில்லை என்ற கோபம் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ளது. திமுக கூட்டணி சிதராதா என சிலர் எதிர்பார்க்கிறார்கள். இதே நிலையை அடித்தால் நாளை திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் 39 வது நாடாளுமன்ற தொகுதியை 31-ஆக குறைக்க பார்க்கிறது. 40 தொகுதிகளிலும் தோற்றதன் எரிச்சல் காரணமாகவே தொகுதி குறைக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எத்தனை நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்தாலும், அதிகரித்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிற பரிசு பூஜ்ஜியம் என பேசினர்.
தொடர்ந்து உரையாற்றிய வனத்துறை அமைச்சர் பொன்முடி:
தமிழ் வளர வேண்டும். திருமணத்தில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுகிறார்கள் அது யாருக்காவது புரிகிறதா? ஆனால் தமிழில் பேசினால் தப்போ, சரியோ புரியும். இரு மொழியை நாம் கற்றுக் கொடுப்பதால் ஒன்றிய அரசு கல்விக்கு கொடுக்கும் நிதியை குறைக்கிறார்கள். மூன்றாவது மொழியை திணித்து அதில் தேர்ச்சி பெற்றால் தான் வேலையான சொல்வது நம் நாட்டில் அதனை ஒத்துக் கொள்ள முடியாது. எனவே இரு மொழி போதும் எனக் கூறுகிறோம். கல்வி வளர வேண்டும் அதற்கு இரு மொழி கொள்கை போதும்.
இதையும் படிங்க: கரண்ட் பிரச்சனையா...? தீர்வுக்கான நேரம் இதான்... சான்ஸ். விட்டு விடாதீங்க மக்களே...!
இந்திய படித்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் கட்டாயமாக திணிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைவாக உள்ளது காரணம் குடும்ப கட்டுப்பாடு. ஒன்றிய அரசு கூறியதை கடைப்பிடித்தோம் அதன் விளைவாக மக்கள் தொகை குறைந்துள்ளது. தமிழ்நாடு நன்றாக இருப்பதற்கு குடும்ப கட்டுப்பாடும் ஒரு காரணம். ஆனால் வட இந்தியாவில் இன்றைக்கும் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இந்தி பேசுபவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அங்கு மக்கள் தொகை அதிகம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் 31 ஆக குறைந்து விடும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா 39 தொகுதிகள் குறையாது என கூறுகிறார். அதே போல் மற்ற மாநிலங்களும தற்போதுள்ள எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும். தொகுதிகளை சதவீதத்தின் அடிப்படையில் உயர்த்தலாம் ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தக் கூடாது. எல்லா மாநிலத்திற்கும் ஒரே சதவீதத்தின் அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என பேசினார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

