கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
மக்களுக்கு நல்லது செய்வேன், ஊழலற்ற அரசை கொடுப்பேன் என கூறி சகோதரர் விஜய் ஜெயித்துள்ளார். தனிப்பட்ட துரை வைகோவாக இது எனக்கு மிகப்பெரிய அளவில் சந்தோஷமாகும்.

கரூர் சம்பவம் நடந்த நாளில் விஜயை குற்றவாளியாக சித்தரித்து அறிக்கை விட சொல்லி திமுக தரப்பில் மதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக துரை வைகோ எம்.பி., தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பேசிய அவரிடம், “கூட்டணி கட்சிகளை நெருக்கடி செய்ததால் தான் அவர்கள் எல்லோரும் திமுகவில் இருந்து தவெகவுக்கு வந்து விட்டார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த துரை வைகோ, “மற்ற இயக்கங்களைப் பற்றி எனக்கு தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெக பக்கம் சாய காரணம் ஒன்று தான். ஓட்டு எண்ணிக்கை முடிவதற்குள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக திமுக செயல்பட்டது தான். அது திமுகவினருக்குமே அதிர்ச்சியாக தான் அமைந்தது. பலபேர் அதனை ஏற்கவில்லை. ஏற்கனவே நாம் தேர்தலில் தோற்று விட்டோம். இப்படி ஒரு முடிவு எடுத்தால் நாளை நமக்கே மோசமாகி விடும் என சொல்லியும் கேட்கவில்லை.
இல்லை. நாம் அதிமுகவுக்கு சப்போர்ட் செய்வோம் என மற்ற கூட்டணி கட்சிகளிடம் திமுக தலைமை தெரிவித்தது. எங்களிடம் அதுபற்றி தெரிவிக்கவில்லை. நாங்கள் அதுபற்றி கேள்விப்பட்டவுடன் நம்ப முடியவில்லை. ஆனால் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சொன்னார்கள். அதைக் கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
முதலமைச்சராக விஜய் வந்துவிடக்கூடாது என அவர்கள் எல்லா வகையிலும் முயற்சி மேற்கொண்டார்கள். எம்.எல்.ஏ. எண்ணிக்கை மட்டுமே இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் விஜய் இன்று முதலமைச்சராக இருந்திருக்க மாட்டார். இது ஆளுமை ஒருவருக்குள் எழுந்த ஈகோ பிரச்னை என சொல்லலாம்.
ஒரு எம்.எல்.ஏ., எம்.பி., என ஒவ்வொருவரும் இவ்வளவு கோடி செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. பணம் இல்லாமல் அரசியல் கிடையாது. ஆனால் விஜய் ஒரு பைசா கூட கொடுக்காமல் ஆட்சிக்கு வந்துள்ளார். சாதி,மத என பிரிவினைவாத அரசியல் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்வேன், ஊழலற்ற அரசை கொடுப்பேன் என கூறி ஜெயித்துள்ளார். தனிப்பட்ட துரை வைகோவாக இது எனக்கு மிகப்பெரிய அளவில் சந்தோஷமாகும்.
மூப்பனார், வைகோ, விஜ்யகாந்த், மக்கள் நல கூட்டணி என பல வகையிலும் முயற்சி செய்தும் நடக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், முக்கிய நிர்வாகிகள் எல்லாரும் அடுத்த தேர்தலுக்கு தயாராக இருங்கள் என சொல்கிறார்கள்.
Also Read: Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
குதிரைப் பேரம் செய்வதே திமுக தான். மதிமுகவில் இருந்த 2 எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுத்து விட்டார்கள். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இல்லாமல் இந்த ஆட்சியை கவிழ்ப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். தவறுகள் நடந்தால் சுட்டிக்காட்டலாம். மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவது, எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லுவது என 24 மணி நேரமும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் விஜய்க்கு மிகப்பெரிய சவால் இருக்கிறது. செங்கோட்டையனை தவிர தவெகவில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் அனுபவம் கிடையாது. இருக்கிற பிரச்னையை திமுக, அதிமுக இணைந்து திட்டமிட்டு பெரிதாக்கி வருகிறார்கள். 2031ல் திமுக அதிமுக கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது. 2029ல் நாடாளுமன்ற தேர்தலில் ரகசிய உடன்பாடு வைக்க வாய்ப்புள்ளது.
கரூர் சம்பவம் நடந்தபோது அன்றிரவு வைகோ என் அறை கதவை தட்டி அந்த சம்பவம் பற்றி பேசினார். திமுக தரப்பில் அறிக்கை விட சொல்கிறார்கள்.விஜயை குற்றப்படுத்தி, இந்த மரணங்களுக்கு காரணம் அவர் தான் என கூற சொல்கிறார்கள். நான் அதெல்லாம் கூடாது என தெரிவித்தேன். விசாரணை எதுவும் இல்லாமல் எப்படி நாம் அறிக்கை விட முடியும் என கேட்டேன். மதிமுக அவைத்தலைவர், பொருளாளரை தொடர்புக் கொண்டு தலைவர் வைகோவை திமுக தரப்பில் தொடர்புக் கொண்ட நபர் அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. அதனால் கொடுக்கக்கூடாது என சொன்னேன் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















