Karur Stampede Video: விஜய் பேசும் போதே நடந்த துயரம்... கொத்துக்கொத்தாக சரிந்த மக்கள்! பதற வைக்கும் காட்சிகள்
Karur Stampede News: கூட்ட நெரிசல் காரணமாக பிரச்சார வாகனத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போதே, கூடியிருந்த மக்களில் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என ஆங்காங்கே மயங்கி விழத் தொடங்கினர்.

கரூரில் நேற்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்த போது, அவரை சூழ்ந்திருந்த கூட்டத்தில் மக்கள் கொத்து கொத்தாக மயங்கி விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அவரை பார்க்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குழந்தை குட்டியுடன் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நாமக்கல் பிரச்சாரத்தை முடித்து விட்டு மாலை கரூர் வந்தார் விஜய். லேட்டாக வருவதை ஹேபிட்டாக கொண்டுள்ள விஜயை காண மணிக்கணக்காக மூச்சுமுட்டும் கூட்டத்தில் காத்திருந்துள்ளனர் அப்பாவி மக்கள். இந்நிலையில் கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்கும் மேலாக கரூரில் மக்கள் விஜயை காண காத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து கூட்ட நெரிசல் காரணமாக பிரச்சார வாகனத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போதே, கூடியிருந்த மக்களில் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என ஆங்காங்கே மயங்கி விழத் தொடங்கினர். இதை பார்த்த விஜயோ பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை எறிந்து பதறினார். சில நிமிடங்களிலேயே நிலைமை மோசமாகி கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் உடல்நலம் மோசமாகி கவலைக்கிடமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகள் இளைஞர்கள் பெண்கள் ஆண்கள் என பலதரப்பினரும் இந்த கோர விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதனையடுத்து தனது பேச்சை உடனடியாக முடித்துவிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆனார் விஜய். தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படியான சூழலில் நேற்று விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் மக்கள் கொத்து கொத்தாக மயங்கி விழும் காட்சிகளும், கூட்டத்தில் சிக்கி அப்பாவி பெண்கள் அலறும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது























