கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Kallakurichi: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், 8 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி, வீரசோழபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.1774 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
முதல் அறிவிப்பு
ரிஷிவந்தியம் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைப்படி, வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும். மேலும், ரிஷிவந்தியத்தில், 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஊராட்சி ஒன்றியக் கட்டடம் கட்டப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள சேந்தநாடு கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவில், புதிய சிட்கோ தொழிற்பேட்டை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு
சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்குப் பயனளிக்கின்ற வகையில், புதுப்பாலப்பட்டு கிராமத்தில், 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு
சின்னசேலம் வட்டத்தில், 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் கட்டப்படும்.
ஆறாவது அறிவிப்பு
திருக்கோயிலூர் பகுதி விவசாயிகளின் நலனுக்காக, அரியூர் கிராமத்தில், 5 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு
கல்வராயன் மலைப் பகுதி பழங்குடியின மகளிர் பயன்பெறும் வகையில், "மகளிர் விடியல் பயணம்” திட்டம் விரிவுபடுத்தப்படும்.
எட்டாவது அறிவிப்பு
புதிதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்படும்.





















