Jana Nayagan Censor: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Jana Nayagan Censor Certificate: ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக யுஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

’’ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இவ்வாறு ஒரு படத்துக்கு எதிரான புகாரை ஊக்குவிக்க முடியாது’’ என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்கு அனுப்பும் முடிவை ஏற்க முடியாது என்றும் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் உடனடியாக யுஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை வாரியத் தலைவர் மீற முடியாது
தவெக தலைவரும் நடிகருமான விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி ஆஷா வாசித்து வருகிறார். தணிக்கைக் குழுவின் முடிவை தணிக்கை வாரியத் தலைவர் மீற முடியாது என்றும் நீதிபதி ஆஷா தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
முன்னதாக ஜனநாயகன் படத்தில் மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த படத்தை ஆய்வு செய்த குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையிலே மறு ஆய்வுக்கு அனுப்பியதாக தணிக்கை குழு தெரிவித்தது. மறு ஆய்வுக்கு அனுப்பியது தொடர்பாக தயாரிப்பு குழுவிற்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், இதில் எந்த வித உள்நோக்கமும் இல்லை என்றும் தணிக்கை குழு அறிவித்தது.
பட தயாரிப்பு நிறுவனம் 5 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர் மட்டுமே ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மற்றவர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க முன்வந்தனர். இதனால், அதன் அடிப்படையில் இந்த பட சான்றிதழை வழங்க முன்வர வேண்டும் என்று முன்வைத்தனர்.
தணிக்கைச் சான்று கிடைக்காததால் இன்று (ஜனவரி 9) ரிலீஸ் ஆவதாக இருந்த ஜனநாயகன் திரைப்படம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எப்போது வெளியாகும்?
நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விஜயின் கடைசிப் படமான ஜனநாயகன், ஜனவரி 11 அல்லது 12ஆம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. படம் நாளை (ஜனவரி 10) வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
தணிக்கை வாரியம் மேல் முறையீடு
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளது.






















