இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் சாலையில் பிரத்யேக சிவப்பு நிற எச்சரிக்கை வண்ணம் பூசும் புதிய தொழில்நுட்பம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தர்மபுரி: இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான கணவாய் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் சாலையில் பிரத்யேக சிவப்பு நிற எச்சரிக்கை வண்ணம் பூசும் புதிய தொழில்நுட்பம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொப்பூர் கணவாய் என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை இணைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய மலைக் கணவாய் மற்றும் பள்ளத்தாக்கு ஆகும். தேசிய நெடுஞ்சாலை 44-இல் (NH-44) அமைந்துள்ள இப்பகுதி, அதன் செங்குத்தான சரிவுகள் மற்றும் தொடர்ச்சியான கோர விபத்துகளால் மிகவும் அறியப்படுகிறது.
12 ஆண்டுகளில் 500 உயிர்கள் பலி: பின்னணி என்ன?
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதி, மிகக் கடுமையான வளைவுகளையும், செங்குத்தான இறக்கங்களையும் கொண்டது. இதனால், கட்டுப்பாட்டை இழக்கும் கனரக வாகனங்கள் இங்கு அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இந்த கணவாய் பகுதியில் நடந்த விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
905 கோடியில் பிரம்மாண்ட உயர்மட்ட மேம்பாலம்
தொடர் விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தொப்பூர் கணவாய் பகுதியில் 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட உயர்மட்ட மேம்பாலம் (Elevated Flyover) அமைக்கும் பணி தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாலய இலக்குடன் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் 2028-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிகப் பாதுகாப்பு மற்றும் நவீன எச்சரிக்கை அமைப்புகள்: மேம்பாலப் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்கத் தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது.
சோலார் பிளிங்கர் விளக்குகள்:
கணவாய் பாதையின் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு, வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த 20 இடங்களில் சூரியசக்தியால் இயங்கும் 'சோலார் பிளிங்கர் லைட்டுகள்' அமைக்கப்பட்டுள்ளன. இவை இரவு நேரத்தில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்குத் தானியங்கி முறையில் எச்சரிக்கை விடுத்து, வாகனங்களை 30 கி.மீ. வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்துகின்றன.
மின்சார பிளிங்கர் விளக்குகள்:
இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் (CSR initiative) மேலும் 35 இடங்களில் மின்சாரத்தால் இயங்கும் பிளிங்கர் விளக்குகள் பொருத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற வேக வரம்பு குறியீடுகள்:
கணவாய் சாலையின் நடுவே ஆங்காங்கே வாகனங்களின் வேக வரம்பு "30 கி.மீ." என்பதை ஓட்டுநர்கள் எளிதாக அறியும் வண்ணம் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2-வது முறையாக 'ரெட் டேபிள் டாப்' தொழில்நுட்பம்!
விபத்து தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக, சோதனை அடிப்படையில் 'ரெட் டேபிள் டாப்' (Red Table Top) எனப்படும் புதிய சிவப்பு நிற விபத்து எச்சரிக்கை வண்ணம் சாலையில் பூசப்பட்டுள்ளது.
கணவாய் பகுதியின் மிக முக்கிய வளைவான ஆஞ்சநேயர் கோவில் வளைவுப் பகுதியில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு இந்த சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தூரத்திலிருந்தே இந்த சிவப்பு வண்ணத்தைப் பார்க்கும் ஓட்டுநர்களுக்கு, "இது மிகவும் ஆபத்தான பகுதி" என்ற எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே தோன்றும்.
இந்தியாவில் இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டுமே இத்தகைய சிவப்பு நிற எச்சரிக்கை சாலை சமிக்ஞை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே இரண்டாவது இடமாக தற்பொழுது தொப்பூர் கணவாய் சாலையில் இத்தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த தொடர் நவீன நடவடிக்கைகள் மூலம், 'இது மிக அபாயகரமான விபத்து பகுதி' என்பதை ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே உணர்த்தி, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் முற்றிலும் தவிர்க்க முடியும்" என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















