மேலும் அறிய
கொரோனா அச்சத்தால் ஹுண்டாய் ஊழியர்கள் நடத்திய போராட்டம் : விடுமுறை அளித்தது நிர்வாகம்
அசாதாரண சூழலில் தொழிற்சாலைகள் செயல்பட்டால் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், எனவே விடுமுறை அளிக்க வேண்டும் என கூறி இன்று காலை முதல் தொழிற்சாலைக்குள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சாலை ஊழியர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹுண்டாய் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது . இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இன்று முதல் தளர்வு இல்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மளிகை கடை உட்பட அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வாகனங்கள் மூலம் வீடு தேடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனாலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, தொழிலாளர்கள் நிறுவனங்கள் சார்பாக ஏற்பாடு செய்து தரப்படும் பஸ் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசிடம் அனுமதியுடன் தொழிற்சாலைகளில் பணியாளர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசின் அனுமதியுடன் பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையிலும் மூன்று ஷிப்ட்களும் இயங்கிவருகிறது அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை முதல் ஷிப்டுக்கு பணிக்கு வந்த பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தொழிற்சாலை இயங்கி வருவதால் பெரும்பாலான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் மூலம் தான் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பத்து நபர்கள் இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். எனவும் இந்த அசாதாரண சூழலில் மீண்டும் தொழிற்சாலைகள் செயல்பட்டால் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விடுமுறை அளிக்கவேண்டும் என கூறி இன்று காலை முதல் தொழிற்சாலைக்குள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடையே நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் எங்களால் எங்களுடைய குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்ப நலம் கருதி இந்த ஒரு வாரம் ஊரடங்கில் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 5 நாட்கள் விடுமுறை அளிப்பதாக நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஹூண்டாய் தொழிற்சாலை வருகின்ற 29-ஆம் தேதி வரை இயங்காது என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு தொழிலாளர்கள் நன்றியினை தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















