"என்னை அழைத்தது பாஜகதான்" அதிமுகவை இயக்குவது யார்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
“நாம் முன்மொழியவில்லை என்றால் கே.பழனிசாமி முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது” என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

“என்னை அழைத்தது பாஜகதான், அதிமுகவை நடத்துவது பழனிசாமியின் குடும்பத்தினர்தான்” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பாக பேட்டியளித்ததுள்ளார்.
தனது ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், பல்வேறு விஷயங்களை அவர் கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி பேட்டி:
அதிமுக வெற்றிபெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கவில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி ஏன், கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர்த்தவில்லை. அவரை 2009ஆம் ஆண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதலமைச்சராக ஆகி இருக்க முடியாது. எனக்கு இபிஎஸ்தான் அமைச்சர் பதவி கொடுத்தார் என கூறுவது வேதனை அளிக்கிறது. கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை நடத்துவது இபிஎஸ் குடும்பம்தான்
நான் தொகுதி மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை என இபிஎஸ் கூறியுள்ளார். தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் பழனிசாமி செய்யவில்லை. தன்னை முதல்வராக்கிய சசிகலாவை கொச்சையாக பேசினார். டிடிவி தினகரன் ஆதரவதோடுதான் பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்தது. கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர். பணம் செலவு செய்தால்போதும் என்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தவர் யார்?. பாஜகவுடன் 2026 தேர்தலிலும் அதற்கு பின்னரும் கூட்டணி இல்லை என்று கூறியவர் எடப்பாடி. அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழற்றிவிட்டவர். கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது என்று எடப்பாடி கூறிய பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஒற்றுமையாக இருந்தால் கூட்டணிக்கு நம்மை நாடி வருவார்கள். முன்னேற வேண்டும் என்றால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி பயணம் செய்யக்கூடாது. என்னை திமுகவின் ‘பி’ டீம் என்று சொல்ல எடப்பாடிக்கு தகுதியில்லை. ஒருமுறை கூட எனக்கு என்ன குறை என்று அவர் கேட்கவில்லை. கட்சியில் கருத்துகள் பரிமாறுவது ஜனநாயக உரிமை. அதிமுக வலியமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கிக்கொண்டே இருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்.
ஓபிஎஸ், டிடிவியை சந்திக்கும் நோக்கோடுதான் தேவர் ஜெயந்திவிழாவுக்கு சென்றேன். இபிஎஸ் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தான் தற்போது அதிமுகவை நடத்தி வருகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்க என்னை அழைத்தது பாஜகதான். பிரிந்து இருப்பவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்குமாறு பாஜகவே அறிவுறுத்தியது. இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அதிமுகவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அடுத்து எம்மாதிரி முடிவு எடுக்கப்போகிறார் என்று அவர் ஆதரவாளர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















