இன்ஸ்டா மூலம் கள்ளக்காதல்.. மகளுடன் ஓடிய பெண்.. கழுத்தை அறுத்து கொன்ற தந்தை!
சிம்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் அறிமுகமானார். இருவரும் முதலில் இன்ஸ்டாகிராம் மூலமும், பின்னர் செல்போன் எண்ணை பறிமாறியும் தங்கள் தொடர்பை வளர்த்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான மகளை தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழுமலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சிம்யா என்ற 23 வயது மகள் இருந்தார். இவருக்கும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற இளைஞருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மகள் சிம்யா தன்னுடைய வீட்டின் அருகில் இருக்க வேண்டும் என நினைத்த தந்தை ஆறுமுகம், அவர்கள் குடும்பத்தை திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் அடுத்துள்ள பாறைக்காடு பகுதியில் வீடு எடுத்து கொடுத்து கவனித்து வந்தார்.
இதற்கிடையில் சிம்யாவின் கணவரான பிரேம் குமார் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையான நிலையில் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இப்படியான நிலையில் சிம்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் அறிமுகமானார்.
இருவரும் முதலில் இன்ஸ்டாகிராம் மூலமும், பின்னர் செல்போன் எண்ணை பறிமாறியும் தங்கள் தொடர்பை வளர்த்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் பிரவீன் குமார், சிம்யாவிடம் நீ உன் குடிகார கணவருடன் இனியும் வாழ்க்கை நடத்தி சிரமப்பட வேண்டாம். கன்னியாகுமரி வந்து விட்டால் நாம் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி அழைத்திருக்கிறார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 2ம் தேதி தனது மகளுடன் சிம்யா கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இதற்கிடையில் வீரபாண்டி காவல் நிலையத்தில் மனைவி மற்றும் மகளை காணவில்லை என கணவர் பிரேம் குமார் ஜனவரி 4ம் தேதி புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிம்யா மற்றும் அவரது மகளை கன்னியாகுமரியில் இருந்து மீட்டு வந்து ஆறுமுகம் மற்றும் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சிம்யாவின் வீட்டில் ஆறுமுகம் இருந்துள்ளார். அப்போது ஏன் கட்டிய கணவனை விட்டு விட்டு வேறு ஒருவருடன் சென்றாய் என மகளிடம் கேட்டுள்ளார். இதனால் சிம்யா, ஆறுமுகம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியால் சிம்யாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
அடுத்த சில நிமிடங்களில் தான் செய்த தவறை எண்ணி அழுதுள்ளார். இதற்கிடையில் சிறிது நேரத்தில் அங்கு வந்த சிம்யாவின் தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை கண்டு அலறி துடிக்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சிம்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தந்தை ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





















