ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வரும் "தபால்" என்பதை குறிக்கும் பெயர் கொண்ட தொலைக்காட்சியை வாங்க தவெக சார்பில் பேரம் பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். திமுக, அதிமுக என அரைநூற்றாண்டுகளைக் கடந்து இரு கட்சிகளுக்கும் போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது.
நெருங்கும் தேர்தல்:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்தாண்டு பிற்பாதி முதலே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், கரூர் சம்பவம் தவெக-வை மிக கடுமையாக பாதித்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு விஜய்யின் அரசியல் பயணம் தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் ஜனநாயகன் சிக்கலில் சிக்கி அமைதியாகவே உள்ளார்.
தொலைக்காட்சி தொடங்கும் தவெக:
ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தங்களுக்கு என்று தொலைக்காட்சிகள் வைத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தங்களுக்கு சாதகமாக செயல்பட தொலைக்காட்சியை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதியதாக தொலைக்காட்சி தொடங்க உரிமம் வாங்குவது உள்பட பல சவால்கள் இருப்பதால், ஏற்கனவே இயங்கி வரும் தொலைக்காட்சியை வாங்க விஜய் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. "தபால்" பெயர் கொண்ட இந்த தொலைக்காட்சி, கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருவதால், அவர்களும் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக, தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பழமையான ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சியை வாங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 3 முறை நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கட்டுப்படியாகாத விலை:
ஆனால், அந்த நிறுவனம் கூறிய விலை தவெக எதிர்பார்த்த தொகையை காட்டிலும் அதிகளவு இருப்பதால் அந்த தொலைக்காட்சியை வாங்குவதில் இழுபறியாக உள்ளது. மேலும், மற்றொரு தொலைக்காட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அந்த தொலைக்காட்சியை கைப்பற்ற தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் அறிவிப்பு:
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், அக்கட்சியின் நிர்வாகிகளும் முக்கிய விவகாரங்களில் வாயைத் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர்.
தங்களுக்கு சாதகமாக ஒரு தொலைக்காட்சி செயல்பட்டால் அது தவெக-வின் குரலாக ஒலிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். தொலைக்காட்சியின் விலை தவெக எதிர்பார்த்த தொகைக்கு வந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம்:
தற்போது வரை விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஆதரவாக எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல, திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இணையத்தில் தொடர் மோதல் வெடித்து வருகிறது. ஆனால், தங்களுக்கு என்று அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி இருந்தால் சாமானிய மக்களைச் சென்றடைவது இன்னும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த தொலைக்காட்சியை விரைவில் தொடங்க தவெக ஆர்வம் காட்டி வருகிறது.






















