EGG Rate: வரலாறு காணாத அளவில் உயர்ந்த முட்டை கொள்முதல் விலை.. எவ்வளவு? காரணம் என்ன?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான கோழிப்பண்ணைகளில், 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாளொன்றிற்கு சுமார் 4.25 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் இங்கு இருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்த முட்டைகளின் கொள்முதல் விலை தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும். அதோடு, தேவை, நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகிய காரணிகளும் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி:
இந்த முட்டைகளுக்கான விலையை வாரத்தில் 3 நாட்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில், முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ.5.55 காசுகளாக உயர்ந்தது. இதனால் பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனையில் முட்டை விலை அதிகபட்சமாக ரூ.7 வரையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு காணாத அளவு விலை உயர்வு:
இதன் மூலம் 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 550 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டதே, தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது.
விலை உயர காரணம்?
வட மாநிலங்களில் குளிர் நிலவுவதன் காரணமாக நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன், கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலேசியாவுக்கு ஒரு மாதத்தில் சுமார் 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாதம் ஒன்றுக்கு நாமக்கல்லில் இருந்து சுமார் 10 கோடி முட்டைகள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதோடு, தமிழகம், கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி முட்டை விற்பனை சூடுபிடித்ததோடு, வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி இருப்பதால் அங்கும் முட்டையின் தேவை அதிகரித்து, அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதோடு, தீவன விலை உயர்வு போன்ற காரணிகளும் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்தார்.
உலகக்கோப்பையில் நாமக்கல் முட்டைகள்:
அண்மையில் கத்தார் நாட்டில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டி காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்தது. மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில் கடந்த மாதம் 3 மடங்கு அதிகரித்து 1.50 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்























