நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
நாம் தமிழர் இயக்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்கள், தனிநபர்கள் மீதான விமர்சனங்களின் தரம் குறித்து எனக்கு மிகுந்த மனவருத்தம் என இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து இயக்குநர் களஞ்சியம் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இயக்குநர் களஞ்சியம் அரசியல் பயணம்
தமிழ் சினிமாவில் பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, கருங்காலி, முந்திரிக்காடு ஆகிய படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். கடந்த 2020ம் ஆண்டு இயக்குநர் களஞ்சியம் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
இவர் முதலில் தமிழர் நலப் பேரியக்கம்" என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வந்தார். அதன்பின்னர் அந்த அமைப்பை நாம் தமிழர் கட்சியுடன் இணைத்துக்கொண்டு 2016ல் இருந்து முழுநேர அரசியல்வாதியாக மாறினார். களஞ்சியத்துக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சீமானின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். இதனிடையே 2024 மக்களவை தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக களஞ்சியம் போட்டியிட்டார். அதேசமயம் 2026ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இரு தேர்தல்களிலும் அவர் தோல்வியடைந்தார்.
Also Read: பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்
இப்படியான நிலையில் இயக்குநர் களஞ்சியம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் சீமானுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்த்தேசியக் கொள்கை என்பது வெறுப்பரசியலைக் கடந்தது. அது அனைவரையும் உள்ளடக்கிய அதிகார மாற்றத்திற்கான கருத்தியல் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். ஆனால்அதற்கு நேர்மாறாகக் கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விமர்சனங்கள் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதலாக இருக்கக் கூடாது என்பது எனது உறுதியான நம்பிக்கையாக உள்ளது. நம்மோடு பயணித்தவர்கள் மற்றும் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீதான இழிவான விமர்சனங்கள், நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்று நான் கருதுகிறேன்.
நாம் தமிழர் இயக்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்கள், தனிநபர்கள் மீதான விமர்சனங்களின் தரம் குறித்து எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு. கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதால், நான் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்தும், நாம் தமிழர் கட்சியிலிருந்தும் முறைப்படி விலகிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
களஞ்சியம் அடுத்ததாக எந்த கட்சிக்கு செல்லவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















