விஜயை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர்... தமிழ்நாடு முழுவதும் நாளை நடக்கப்போகும் அதிரடி சம்பவம்
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ்

தவெக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் நாளை (08.05.2026) காலை 11:00 மணியளவில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்
முன்னதாக செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது. மேலும், ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாகவுள்ளது.
பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக ஆளுநர் தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















